பெங்களூரின் டேஞ்சர் மண்டலம்.. உயிரை குடிக்கும் அவுட்டர் ரிங் ரோடு! ஐடி ஊழியர்கள் அதிகம் உலாவும் இடம்
பெங்களூர்: பெங்களூரில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள ஓஆர்ஆர் எனும் அவுட்டர் ரிங் ரோட்டில் தான் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அதிக விபத்துகள் நடந்துள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. இதனால் அந்த ரோட்டை பயன்படுத்தும் ஐடி ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கவனமாக செல்ல வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
பெங்களூர்.. இந்தியாவின் சிலிக்கான் சிட்டி எனும் புனைப்பெயருடன் அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள ஐடி நிறுவனங்கள் தான்.
பிரபலமான ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் செயல்பட்டு வருவதால் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

அவுட்டர் ரிங் ரோடு
போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நகரில் புதிதாக மேம்பாலங்கள், புதிய சாலைகள், அவுட்டர் ரிங் ரோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தான் 60 கிலோமீட்டர் தொலைவுக்கு பல்வேறு முக்கிய சந்திப்புகளை இணைக்கும் வகையில் அவுட்டர் ரிங் ரோடு(டாக்டர் புனித் ராஜ்குமார் ரோடு) அமைக்கப்பட்டது. துமகூரு ரோடு, ஏர்போர்ட் ரோடு, ஓல்ட் மெட்ராஸ் ரோடு, ஒசூர் ரோடு, பன்னரக்கட்டா ரோடு கனகபரா ரோடு, மைசூர் ரோடு, மாகடி ரோடு உள்ளிட்ட ரோடுகளை இந்த அவுட்டர் ரிங் ரோடு இணைக்கும் இந்த அவுட்டர் ரிங் ரோடு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

ஆபத்தான ரோடாக மாற்றம்
இந்த ரோட்டில் ஐடி நிறுவனங்கள் அதிகம் இருக்கிறது. மேலும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், பெரிய தொழிற்சாலைகளும் குறைவின்றி உள்ளன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகமாக பணி செய்து வருகின்றனர். இதேபோல் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஏராளமாக பணி புரிந்து வருகின்றனர். இதனால் அவர்களும் விரைவில் சென்று வர வசதியாக இந்த சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க தற்போது இந்த அவுட்டர் ரிங் ரோடு பற்றிய ஷாக் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பெங்களூரில் மிகவும் ஆபத்தான பாதையாக இந்த அவுட்டர் ரிங் ரோடு மாறியுள்ளதாம்.

உயிரிழப்பு அதிகம் நடக்கும் இடம்
ஆம் நீங்கள் படித்தது சரிதான். இந்த ரோட்டில் தான் அதிகளவில் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஓஆர்ஆர் எனும் அவுட்டர் ரிங் ரோட்டில் கடந்த 2019 முதல் 2021 வரை உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பேட்டல் ஆக்சிடென்ட் விபத்துகள் 69 நடந்துள்ளன. அதாவது 69 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பெங்களூர் மாநகர போலீசாரின் அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஓசூர் சாலையில் 57 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

அதிக விபத்துகளில் 3வது இடம்
இருப்பினும் அதிக விபத்துகள் (உயிரிழப்பு + உயிரிழப்பு இல்லாத விபத்துகள்) என்பது ஓசூர் ரோட்டில் தான் அதிகம் நடந்துள்ளன. இதற்கு அடுத்த படியாக அதிக விபத்துகள் நடந்த ரோடாக பல்லாரி ரோடு உள்ளது. இந்த பட்டியலில் 3வது இடத்தில் அவுட்டர் ரிங் ரோடு உள்ளது. அதன்பிறகு துமகூரு ரோடு, சர்ஜாபூர் மெயின் ரோடு, ஓல்டு மெட்ராஸ் ரோடு, நைஸ் சாலைகள் அடுத்தடுத்து உள்ளன.

பெங்களூரில் 650 விபத்துகளில் உயிர் பலி
இந்த சாலைகளை பாதுகாப்பானதாக மாற்ற மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் இன்னும் முழுமையாக கைக்கொடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து விபத்துகளும், உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. அதன்படி பெங்களூரில் ஆண்டுக்கு சராசரியாக 650 விபத்துகளில் உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன. பெங்களூர் நகரை பொறுத்தமட்டில் தற்போது விபத்து பகுதிகள் என மொத்தம் 63 இடங்கள் உள்ளன. இங்கு தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. இதில் 20 இடங்கள் கடந்த ஆண்டு அடையாளம் காணப்பட்டு விபத்து ஏற்படும் பகுதிகளின் பட்டியலில் இணைக்கப்பட்டது.

விபத்து பகுதிகள் என்னென்ன?
மேலும் கடந்த ஒரு ஆண்டு நிலவரப்படி விபத்துகளில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாதசாரிகளாகவும், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களாகவும் உள்ளன. குறிப்பாக அவுட்டர் ரிங் ரோட்டை பொறுத்தமட்டில் இப்லூர் சந்திப்பு, ஹென்னூர் சுரங்கப்பாதை, பாபுசபால்யா, பாக்மனே டெக் பார்க், ஜேபி மோர்கன் மற்றும் கார்த்திக் நகர் (2ம் மாரத்தஹள்ளி) மற்றும் மகாதேவபுரா ஆகியவை விபத்து பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பல்லாரி ரோட்டில் ஜக்கூர் (மேம்பாலம்), யெலஹங்கா புறவழிச்சாலை, பலனஹள்ளி கேட், கண்ணமங்கலா பால்யா கேட், ஹுனசமரனஹள்ளி, பெட்டஹலசுரு சந்திப்பு மற்றும் கோடிகானஹள்ளி கேட் ஆகிய இடங்களில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளாகும். ஓசூர் ரோட்டில் பொம்மனஹள்ளி சந்திப்பு, குட்லு கேட், சிங்கசந்திரா பஸ் ஸ்டாப், கார்வேபவிபல்யா, கோனப்பன அக்ரஹாரா, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பஸ் ஸ்டாப் மற்றும் வீரசந்திரா சந்திப்பு ஆகியவை விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களாகும்.

ஓசூர் ரோட்டில் அதிக விபத்து ஏன்?
இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛ஓசூர் சாலையில் தான் ஆண்டுதோறும் அதிக விபத்து பதிவாகிறது. இதற்கு அந்த சாலையின் அகலம் தான் காரணம். ஓசூர் சாலை மிகவும் அகலமாக உள்ளது.இதனால் வாகனத்தில் செல்வோர் வேகமாக செல்கின்றனர். இங்கு பாதசாரிகளின் நடமாட்டமும் அதிகம். இதனால் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் விபத்துகள் கட்டுக்குள் வரவில்லை. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

மாற்றம் தேவை
இதுபற்றி டபிள்யூஆர்ஐ இந்தியாவின் ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் பவான் முலுகுட்லா கூறுகையில், ‛‛ பெரும்பாலான சாலைகளில் பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. மேலும் பாதசாரிகள் தாங்கள் விரும்பும் இடத்தில் சாலையை கடக்கின்றனர். இதில் மாற்றம் வேண்டும். இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபத்து அதிகமாக நடக்கும் இடங்களில் வேகப்பரிசோதனை செய்ய வேண்டும். வாகனத்தின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பது என்பது விபத்தை குறைக்கும். இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications