டிரம்ப் வர்த்தக போரை விடுங்க! பெங்களூரில் அரசு vs IT நிறுவனங்கள் இடையே நடக்கும் போர் பற்றி தெரியுமா?
பெங்களூர்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வர்த்தக போரை தொடுத்துள்ளார். முக்கியமாக இந்தியா, ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்த வர்த்தக போர் காரணமாக இந்திய ஐடி துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
முக்கியமாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு செக் வைக்கும் விதமாக அமெரிக்க H-1B விசா கட்டணங்கள் 100,000 ஆக உயர்த்தப்படும் என்றும் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

அமெரிக்க H-1B விசா கட்டணங்கள் 100,000 டாலராக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இனி ஆன்சைட் பணிகளை குறைக்க போவதாக அந்த நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
இனி அமெரிக்க H-1B விசா மீதான தங்களின் சார்புநிலையைக் கணிசமாகக் குறைத்து, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கான பணிகளை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவரப் போவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதாவது ஆன்சைட் பணிகளை இனி செய்ய போவது இல்லை.. அல்லது குறைக்க போகிறோம் என்று அறிவித்து உள்ளன.
ஐடி துறைக்குள் மோதல்
இப்படி இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்கள் டிரம்ப் நடவடிக்கையால் கதறி வரும் நிலையில்.. இந்தியாவிற்கு உள்ளேயே கர்நாடக அரசுக்கும் பெங்களூர் ஐடி நிறுவனங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த லாஜிஸ்டிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனமான BlackBuck, அதன் பெல்லந்தூர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யவுள்ளதாக அறிவித்தது. நகரின் வெளிவட்டச் சாலையில் (Outer Ring Road - ORR) அமைந்துள்ள இந்த அலுவலகத்தை விட்டு வெளியேற நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், அப்பகுதியில் நிலவும் மோசமான சாலை வசதிகளும், கடும் போக்குவரத்து நெரிசலுமே என்று அறிவித்தது.
BlackBuck நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் யபாஜி இந்த அறிவிப்பை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்காவது சாலையில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது என்று நினைக்கிறன். இங்கே இருப்பது சரியாக இருக்காது. அதனால் நாங்கள் பெல்லந்தூர் இடத்திலிருந்து வெளியேறுகிறோம் என்று குறிப்பிட்ட்டார். இந்தச் செய்தி வெளியானதும், பெங்களூரின் உள்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்துப் பரவலான விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
சித்தராமையா கடும் கண்டனம்
ஆனால் இதை பற்றி ஆக்கபூர்வமாக பதில் அளிக்காமல் கர்நாடக முதல்வர் சித்தராமையா கோபத்துடன் பதில் அளித்தார். அதில், கர்நாடகாவில், பெங்களூரில் மட்டும்தான் சாலையில் குழி இருக்கிறதா? மற்ற நகரங்களில், மாநிலங்களில் குழி இல்லையா? என்ன செயல் இது? பிரதமர் வீடு முன்பே குழி இருக்கிறதே என்று கடுமையாக சித்தராமையா பதில் அளித்து இருந்தார். இதையயடுத்து பெல்லந்தூர் அலுவலகத்தை மட்டுமே இடமாற்றம் செய்வதாகவும், பெங்களூரு நகரை விட்டு வெளியேறும் திட்டம் இல்லை என்றும் BlackBuck நிறுவனம் விளக்கமளித்தது.
ஐடி நிறுவனத்துடன் சண்டை
சித்தராமையா இப்படி கோபமாக பேசியதை பல ஐடி ஊழியர்கள் அங்கே கண்டித்து இருந்தனர். சாலைகளை சரி செய்யவில்லை. டிராபிக் பிரச்சனைகளை சரி செய்யவில்லை. அதை எல்லாம் செய்யாமல் ஐடி நிறுவனங்களுடன் மோதலுக்கு செல்வது எப்படி சரியாக இருக்கும் என்று ஐடி ஊழியர்கள் கடுமையாக கண்டித்து உள்ளனர்.
இந்த பிரச்சனை முடியும் முன்பே விப்ரோ நிறுவனத்துடன் சண்டைக்கு சென்றுள்ளார் சித்தராமையா. பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, விப்ரோ நிறுவன வளாகம் வழியாக பொதுமக்கள் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விடுத்த கோரிக்கையை, விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி நிராகரித்துள்ளார்.
அதாவது பொது சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க வழி செய்யாமல், தனி நிறுவனத்தின் நிலம் வழியாக பொதுப்போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என்று சித்தராமையா கேட்டது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. வெளிவட்டச் சாலையில் (ORR) ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. பிரேம்ஜி இதற்கு வாய்ப்பே இல்லை என்று நிராகரித்து உள்ளார்.
அங்கே கடந்த சில மாதங்களாகவே அரசு தரப்பிற்கும் ஐடி நிறுவனங்களுக்கும் இடையே ஒருவிதமான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த மோதல்கள் இப்போது அதிகரிக்க தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications