தொங்கு தோட்டம்.. பசுமை சுவர்.. பிரமிக்க வைக்கும் பெங்களூர் விமான நிலையம்.. பிரமாண்டத்தின் உச்சம்
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பெங்களூர் விமான நிலையத்தின் 2வது முனையம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொங்கு தோட்டம், பசுமை சுவர், மூங்கில் பயன்பாடு, கலைநயமிக்க வடிவம் என பயணிகளை கவரும் வகையில் உள்ள இந்த விமான நிலையம் உலகில் மிகச்சிறந்ததாக மாறும் என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் பெங்களூர் முன்னணியில் உள்ளது. இந்த விமான நிலையம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்துக்கு ஆண்டுதோறும் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் விமான பயணிகளின் வசதிக்காகாக 2வது முனையம் (டெர்மினல்) அமைக்கப்பட்டது.

உலக நாடுகளை விட சிறப்பு
இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில் பெங்களூர் விமான நிலையத்தின் 2வது முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். பளபளவென பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த முனையம் தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. பயணிகளை கவரும் வகையில் உலகின் பிற நாடுகளை காட்டிலும் சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் இந்த முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வியக்க வைக்கும் பிரமாண்டம்
இதனால் விமானம் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையாவது பெங்களூர் விமான நிலையத்துக்கு சென்று விட வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் இந்த முனையத்தின் சிறப்பம்சம் என்பது அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் வகையிலும், வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் அமைந்துள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த முனையத்தின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய விபரம் வருமாறு:

தோட்டத்துக்கு நடுவே முனையம்
பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வேதச விமான நிலையத்தின் 2வது முனையம் ரூ.5 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ளது. அதாவது பெங்களூர் விமான நிலையத்தை விரிவாக்கும் வகையிலான திட்டம் தான் இது. இந்த திட்டத்தின் மூலம் தோட்டத்துக்குள் இருக்கும் முனையம் (டெர்மினல் இன் எ கார்டன் Or Terminal In a Garden) என்ற தீம் மூலம் 2வது முனை கட்டும் பணி துவங்கியது. அதாவது முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், இயற்கையோடு மக்கள் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. மேலும் கார்டன் சிட்டி என பெங்களூர் அழைக்கப்படும் நிலையில் அதன் சிறப்பை பயணிகளுக்கு எடுத்து கூறும் வகையில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

மூங்கிள் சொர்க்கம்
இந்த முனையம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 645 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த முனையத்தில் பெரும்பாலான பகுதிகளில் மூங்கில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கார்பன் வெளியீட்டை குறைக்கும்.அதிகளவில் மூங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் மூங்கில் சொர்க்கம் என சிலர் கூறி வருகின்றனர். மூங்கிலில் பல்வேறு கலைநயமிக்க கலைஞர்கள் சில வித்தியாசமான வடிவங்களை பொறித்துள்ளனர். இது அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

செடிசுவர்
மேலும் பசுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 ஆயிரம் சதுர மீட்டர் தொலைவுக்கு செடி, அழகிய மரங்கள் மூலம் பசுமை சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக விமான நிலையங்களில் இருக்கும் சுவர்களுக்கு பதிலாக செடிகள் சுவர்கள் போன்று வளர்க்கப்பட்டுள்ளன. இது வித்தியாசமான முறையில் மிகவும் அழகாக உள்ளது.

தொங்கு தோட்டம்
அதோடு பசுந்தாவரங்களுடன் தொங்கு தோட்டம் உள்ளது. இது பயணிகளை நிச்சயம் கவரும். இது வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வை நிச்சயம் வழங்கும். விமான நிலையங்கள் என்றால் சுற்றிலும் சுவர்கள் என்ற மனநிலையை மறந்து பசுமையான தோட்டங்களுக்கு நடுவே கண்களுக்கு குளிர்ச்சியாக பயணிகள் நடந்து செல்லும் உணர்வை இது ஏற்படுத்தும்.

அதிகாரி கூறுவது என்ன?
இதுபற்றி பெங்களூர் விமான நிலையத்தின் மேலாளர் (Landscaping) பிரசன்ன குமார் கூறுகையில் ‛‛பெங்களூர் கார்டன் நகர் என்பதால் அதற்கேற்ப முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகள் வெளிநாடுகளில் இருந்து தாவரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தாவரங்கள் குறைந்த சூரிய வெளிச்சம், தண்ணீரின்றி பசுமையாக இருக்கும். இதற்காக மொத்தம் 8,060 வகையான தாவரங்களை ஆராய்ந்து 400 தாவரங்களை தேர்வு செய்து அதில் இருந்து அதிக உயரம் வரளாத அதேநேரத்தில் அழகாக இருக்க கூடிய செடி, மரங்களை தேர்வு செய்து பசுமையாக இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

செயற்கை அருவிகள்
மேலும் விமான நிலையத்தில் கலைநயமிக்க பல்வேறு அம்சங்கள் உள்ளன. இது கர்நாடகாவின் பாரம்பரியம், கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. அதன்படி கர்நாடகத்தில் உள்ள பழங்கால சிலைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. 60 கலைநயமிக்க சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சி துறைகள் சார்பிலும் சில சிலைகள் கொண்டு வரப்பட்டு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதோடு சில இடங்களில் சிறிய அளவிலான செயற்கை அருவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தை பொறுத்தமட்டில் பயணிகள் நுழைவு முதல் விமான பயணம் ஏற்படுத்தும் வகையில் செல்ப் பேக்கேஜ் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.

முதலில் உள்நாட்டு பயணம்
இந்த 2வது முனைம் செயல்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. இப்படி பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த 2வது முனையத்தில் தற்போது சில பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு தான் முழுவதுமாக பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதுவரை உள்நாட்டு விமானங்கள் மட்டும் இந்த முனையத்தை பயன்படுத்த உள்ளன. இது டிசம்பரில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதன்பிறகு தான் சர்வதேச விமான சேவைகள் துவங்கப்படும். இதற்காக முதற்கட்டமாக ஏர் ஆசிாயா, ஏர் இந்தியா நநிறுவனங்களின் விமானங்கள் இந்த முனையத்தை பயன்படுத்தும். அதன்பிறகு பிற நிறுவனங்கள் இந்த முனையத்துக்கு மாற்றப்படும்.

பிளாட்டின மதிப்பீட்டு சான்று
இந்த விமான முனையத்துக்கு அமெரிக்காவின் ஜிபிசி எனும் கிரீன் பில்டிங் ககவுன்சிலில் இருந்து பிளாட்டின மதிப்பீட்டுக்கான சான்று பெற உள்ளது. இதன்மூலம் உலகின் மிகப்பெரிய கிரீன் பில்டிங் கவுன்சில் சான்று பெற்ற விமான நிலையமாக பெங்களூர் விமான நிலையம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே சிறந்தது
இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‛‛கார்டன் நகரான பெங்களூருக்கு பெருமை சேர்க்கும் வகையில் 2வது முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் நடைப்பயணம் செய்து தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்'' என கூறியுள்ளது. இந்த 2வது முனையத்தை பலர் வியந்து பாராட்டி உள்ளனர். பெங்களூரில் வசித்து வரும் Zerodha இணை நிறுவனர் நிகில் காமத், ‛‛பெங்களூரு விமான நிலையம் உலகிலேயே சிறந்த ஒன்றாகும்'' என குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் வருகையை அதிகரிக்க..
கொரோனா பரவலுக்கு பிறகு பெங்களூர் விமான நிலையத்தில் பயணிகள் வருகை என்பது 102 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சர்வதேச பயணத்தை பொறுத்தமட்டில் 85 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போதைய 2வது சரக்கு முனையத்தால் ஆண்டுக்கு 2.5 கோடி பயணிகள் வந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமாண்டமான கெம்பேகவுடா சிலை திறப்பு
மேலும் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர் விமான நிலையத்தின் அருகே 108 அடி உயரத்தில் கெம்பேகவுடாவின் வெண்கல சிலையை திறந்துவைத்தார். பெங்களூர் நகரை வடிவமைத்த கெம்பேகவுடா ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த சிலை திறப்பும் அரசியல் சார்ந்து விவாதத்ததை கிளப்பி உள்ளனர். அதாவது ஒக்கலிகர் சமுதாயத்தின் ஓட்டு என்பது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கு தான் அதிகம் கிடைக்கும். பாஜவிலும் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர் இருந்தாலும் குறைந்த அளவே ஒக்கலிக்கரின் ஓட்டு கிடைக்கிறது. தற்போதைய சிலை திறப்பு என்பது பாஜகவுக்கு ஒக்கலிகரின் ஓட்டுக்கள் அதிகம் கிடைக்க வழிவகுக்கும் என அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications