மதில்கள்.. அகழிகள்.. 2 முறையாவது யூ-டர்ன்.. இப்படித்தான் கொரோனாவை 'ஓட ஓட' விரட்டுது பெங்களூர்
பெங்களூர்: இரவு 10 மணி.. கொஞ்சம் கும்மிருட்டு.. பெங்களூருக்குள் சுமார் 6 கி.மீ தூரத்தை வாகனத்தில் கடக்க வேண்டிய அவசரம். ஒவ்வொரு ஏரியாக்குள் போகும் சாலையிலும் மட்டுமில்லை, மெயின் ரோட்டிலும் செக் போஸ்ட் போட்டு அமர்ந்திருக்கும் போலீசாரை தாண்டி செல்ல வேண்டிய சூழ்நிலை.
கையில் மீடியாவுக்கான அடையாள அட்டை இருப்பதால், தடுத்து நிறுத்தப்பட மாட்டோம் என்பதை அறிந்திருந்தேன். போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் இதுபற்றி ஏற்கனவே திட்டவட்டமாக சொல்லியிருந்ததால் வந்த தைரியம் அது.
அதேநேரம், வாகன பாஸ்களை வண்டியின் மீது ஒட்டிவிடலாம், பிரஸ் ஐடி கார்டை பாக்கெட்டில்தான் வைக்க முடியும். ஒவ்வொரு செக் பாயிண்டிலும், அதை எடுத்துக் காண்பித்து.., என்ன தேவைக்காக போகிறோம் என்பதை சொல்லிவிட்டு கடக்க வேண்டுமானால், தாமதமாகுமே.., என்ற எண்ணம் மனதுக்குள் ஓடியது.
அதிக நேரம் ஆகலாம்
அதிலும் இரவு நேரம் என்பதால், பாவம் போலீசாரும் சோர்வாகத்தான் இருப்பார்கள்.. சிலருக்கு ஷிப்ட் மாறும்.. அதனால் கண்டிப்பாக ஐடி கார்டுகளை பார்த்து பேசி அனுப்பி, குறிப்பிட்ட இடத்திற்கு போக எப்படியும் அரை மணி நேரமாகிவிடும் என்றுதான் நினைத்தேன். வழக்கமான நாட்களாக இருந்தால் இந்த தூரத்தை 20 நிமிடங்கள்தான் ஆகும் என்பதையும் எண்ணிப் பார்த்தேன்.
ஒரே ஒரு போலீஸ்காரர்
பைக்கை கிளப்பினேன்.. மெயின் ரோட்டில் போனால்தானே, ஒவ்வொரு இடமாக பதில் சொல்ல வேண்டும். ரெஷிடென்ஷியல் ஏரியாக்களுக்குள் இருக்கும் மெயின் ரோட்டை பிடித்து போய்விடலாம் என திடீரென ஆப்ஷனை மாற்றினேன். கிளம்பி 500 அடி கூட இருக்காது. அங்கே ஒரு போலீஸ்காரர் சேர் போட்டு அமர்ந்திருந்தார். வண்டியின் வேகத்தை குறைத்தேன்.. ஆனால் கண்டுகொள்ளவில்லை.. எதிரேயிருந்தும் சில பைக்குகள், கார்கள் கிராஸ் ஆகின. சரி இவர் கண்டுகொள்ள மாட்டார் போல.. அப்படியே போகலாம் என நினைத்து போய்விட்டேன். 1 கிலோ மீட்டர் தாண்டியிருப்பேன். சாலைகளில் மக்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக முகக் கவசம் அணிந்தபடி நடந்து கொண்டிருந்தனர்.
காதலர்கள்
பிஜியில் தங்கியுள்ள பெண்கள், கொரோனா பீதிக்கு நடுவேயும், காதலன் கரம்பிடித்து நடந்து கொண்டிருந்தனர். பெருமூச்சு விட்டபடியே வண்டியின் வேகத்தை கூட்டினேன் (கொரோனா ஆபத்து தெரியாமல் உரசியபடியே நடந்து செல்கிறார்களே என்பதால் வந்த பெருமூச்சுதான் பாஸ்). இன்னும் ஒரு போலீஸ் கூட வழிமறிக்கவும் இல்லை, வழியில் தென்படவும் இல்லையே என்ற யோசனையுடன் பயணித்த எனக்கு காத்திருந்தது ட்விஸ்ட்.
ரோட்டுக்கு குறுக்கே மதில்
உடுப்பி கார்டன் ஜக்ஷன் என்று சொல்வார்கள். பிடிஎம் லேஅவுட் என்ற ஒரு முக்கிய ரெஷிடென்ஷியல் ஏரியாவிற்குள் செல்வதற்கான முக்கிய சாலை சந்திப்பு அது. சாலையின் குறுக்கே பெரிய மதில் போல ஏதோ தென்பட்டது. அதற்குள் தூக்க கலக்கம் கண்ணை கலங்கடித்துவிட்டது பாரேன்.. என மைண்ட் வாய்சில் பேசிக் கொண்டே, கண்ணை கசக்கி பார்த்தேன். அது மதிலேதான்!!. "அடப்பாவிகளா, இங்க இருந்த ரோட்டை காணோம்" என்று வடிவேலு மாடுலேஷனில் மனசாட்சி சவுண்ட் விட்டது.
பள்ளங்கள்
ஏரியாக்குள் போகக்கூடாது என்று போலீஸ்தான் இப்படி செய்துள்ளது போல.. சீனா 10 நாளில் ஆஸ்பத்திரியே கட்டும்போது, நம்மூர் போலீஸ், ஒரு குட்டி மதிலை கட்டுனதா பெரிய விஷயம்.. என சமாதானப்படுத்திக் கொண்டு, அப்படியே வலது பக்கம் போய், அப்புறம் இடதுபக்கம் போய்விடலாம் என மனசுக்குள், மேப்பை மாற்றிப்போட்டு, கிளம்பினேன். அங்குதான் அடுத்த திருப்பம். ஆம்.. திருப்பவே முடியாத நிலையில் ரோடு இருந்ததுதான் திருப்பமே. சாலையின் ஓரத்தில் குழியைத் தோண்டி போட்டுள்ளார்கள். ராஜா காலத்தில் அகழிகளை வெட்டி எதிரிகள் உள்ளே வராமல் தடுப்பார்களே அந்த டெக்னிக். பாகுபலி படத்தை பல முறை பார்த்து, நாடி நரம்பெல்லாம் வெறி ஏறிய ஒருவரால்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும். அப்படியும் ஒரு பெட்ரோல் பங்க் பக்கத்தில் தம்மாத்தூண்டு இடம் இருந்ததை பயன்படுத்தி ஏரியாக்குள் என்ட்ரி ஆகியாச்சு.
வடிவேலு கதைதான்
ஆனால், இது வெறும் ட்ரைலர்தான். அதற்கு பிறகு ஆங்காங்கு, சாலையின் குறுக்கே கற்குவியல்கள், மதில்கள், அகழிகள் என்ற பெயரில் பெரும் கிணறுகள், சில இடங்களின் கம்பி வேலிகள் என ஏதோ ஒரு மர்ம தேசத்திற்குள் புகுந்த உணர்வுதான் எஞ்சியது. டேக் டைவர்சன் என சொல்லி, சென்னையிலிருந்து திருப்பதிக்கே விவேக் பைக்கில் போகும் காட்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாத தருணங்கள் இவை. இங்க தலவாசல் எங்கய்யா இருக்கு.. ஒரே தெருவுல சுத்தி சுத்தி ஓடுறோமேங்குற.. வடிவேலு டயலாக்கின்படிதான் இப்போது வாழ்கிறார்கள் பெங்களூர்வாசிகள் என்பது புரிந்தது.
நல்லவேளை, கிளம்பிய இடத்திற்கே வரவில்லை
கடைசியில், ஒரு போலீசும் எதிர்படாமல், ஈ கூட நடமாடாத அந்த இரவு வேளையில், 6 கி.மீ தூரத்தை, 1 மணி நேரம் கழித்துதான் சென்று சேர்ந்தேன்.. ஒவ்வொரு தெருவிலும், 2 முறையாவது யூ டர்ன் போட்டதை பார்த்தால், மெரீனா பீச் குதிரை போல, எனது வாகனமும், என்னை கிளம்பிய இடத்துக்கே திரும்ப போய் விட்டுவிடுமோ என்ற அச்சம்தான் மேலோங்கியது. அப்படி நடக்கவில்லை என்பதால், அப்பாடா என விட்ட நிம்மதி பெருமூச்சில் இந்த நேரக் கணக்கையெல்லாம் பெருசா படவில்லை.
வாட்டசாட்டமா இருக்கனும்
அப்புறம் விசாரித்து பார்த்த பிறகுதான் தெரிந்தது, அந்த மதில்களும், அகழிகளும், கற்குவியல்களும் போலீசாரால் போடப்பட்டது இல்லை, ஏரியாக்காரர்களே தங்களைத்தாங்கள் காத்துக்கொள்ள போட்டது என்பது. எப்படி என்கிறீர்களா..? எங்கள் ஏரியாவிலும் அடுத்த நாளே அந்த வேலையைத்தான் பார்த்து வச்சிருக்காங்க. ஹை ஜம்ப், மற்றும் லாங் ஜம்ப் தெரிந்தால் மட்டுமே, இங்கு, காய்கறி கடைக்கு கூட போக முடியும்.
- ஒரு பத்திரிக்கையாளரின் டைரி குறிப்பில் இருந்து!