"அதெப்படி ஓவர்டேக் செய்யலாம்.." நள்ளிரவில் பெண்ணை துரத்தி சென்று தாக்கிய கும்பல்! பெங்களூரில் திக்திக்
பெங்களூர்: ஓவர்டேக் செய்யும் விவகாரத்தில் (Bangalore Road rage) ஏற்பட்ட மோதல் காரணமாகப் பெண் ஒருவரை 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று பின்தொடர்ந்து சென்று மிரட்டியுள்ளது. மேலும், அந்தப் பெண்ணின் காரையும் அடித்துச் சேதப்படுத்தியுள்ளது. வீடு வரை அந்தக் கும்பல் வந்து பிரச்சனை செய்த நிலையில், சமாதானம் செய்ய வந்த அப்பெண்ணின் தந்தையையும் அவர்கள் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது நமது நாட்டில் சாலைகளில் செல்லும்போது சிறு சிறு விஷயங்களுக்குக் கூட கோபப்பட்டு சண்டை போடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை ஆங்கிலத்தில் ரோட் ரேஜ் என்பார்கள். முன்பெல்லாம் வெளிநாட்டில் மட்டுமே இருந்த இந்தச் சிக்கல், இப்போது இந்தியாவிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் அரங்கேறியுள்ளது.

பெண்ணை விரட்டி தாக்குதல்
பெங்களூர் ஹுலிமாவு பகுதியில் நள்ளிரவில் காரில் சென்ற பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலையில் நடந்த ஒரு சின்ன பிரச்சனையைத் தொடர்ந்து சுமார் 10 முதல் 12 பேர் கொண்ட கும்பல் தன்னை விரட்டித் தாக்கியதாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.
அதாவது கடந்த திங்கள்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. அன்றிரவு காரை ஓட்டிச் சென்ற பெண், டாக்ஸி ஒன்றை முந்தி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் காரில் அப்பெண்ணைப் பின்தொடர்ந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பெண்ணின் காரை ஓவர்டேக் செய்த அவர்கள், பெண்ணை மிரட்டியுள்ளனர். அவர்கள் தன்னை சூழ்ந்து கொண்டு மிரட்டியதாகப் பெண் தெரிவித்துள்ளார். மேலும், காரையும் சேதப்படுத்தியுள்ளனர்.
பரபர புகார்
மேலும், சிலர் செங்கற்களுடன் தன்னை விரட்டியதாகவும் தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திற்குள் கூட பின்தொடர்ந்து வந்ததாக பெண் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே இது தொடர்பான சிசிடிவி காட்சிகளிலும் இப்போது வெலியாக்கியுள்ளது. அதில் 12 பேர் கொண்ட கும்பல் பெண்ணின் காரை வழிமறித்துச் சேதப்படுத்தப்பட்டது பதிவாகியுள்ளது. மேலும், அவர்கள் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து வன்முறையைத் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
தந்தை மீதும் தாக்குதல்
இவர்கள் விடாமல் பிரச்சனை செய்ததால் பெண்ணின் தந்தையும் உறவினர்களும் தலையிட்டு சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது இந்தக் கும்பல் அவர்களையும் தாக்கியுள்ளது. இது தொடர்பாகக் குறித்துத் தான் பெண் தரப்பு புகாரளித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு அப்பெண்ணின் தந்தை ஹுலிமாவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய கும்பல் டாக்ஸி ஓட்டுநர்கள் என்று பெண் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் எதாவது டாக்ஸி நிறுவனத்திற்காக வேலை செய்கிறார்களா.. இல்லை அப்பெண்ணுக்கும் அவர்களுக்கும் ஏற்கனவே எதாவது பிரச்சனை இருந்ததா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் விசாரணை
இது தொடர்பாக பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், சிசிடிவி காட்சிகளை வைத்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications