‛ChatGPT’.. பெங்களூர் பல்கலைக்கழகங்களில் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை.. ஏன் தெரியுமா? பரபர பின்னணி
சாட் ஜிபிடி ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்ஸை பயன்படுத்தி அமெரிக்காவில் மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதால் பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகங்களில் அதனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்: இணையதள உலகில் தற்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ChatGPT அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்துள்ளது. அனைத்து கேள்விகளுக்கு உடனடியாக விரிவாக, புரியும் வகையில் பதில் அளிப்பதோடு, மாணவர்கள் தேர்வெழுத உதவும் என்பது தான் இதன் சிறப்பம்சமே. அமெரிக்காவில் ChatGPT பயன்படுத்தி தேர்வெழுதி முறைகேடு நடந்த நிலையில் பெங்களூரில் உள்ள 2 பல்கலைக்கழகங்கள் உள்பட 3 கல்வி நிறுவனங்கள் அதனை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
Chat GPT... இணைய உலகில் தற்போது அதிகம் கேட்கப்படும் மற்றும் தேடப்படும் வார்த்தையாக இது மாறி உள்ளது. சாதாரண மனிதன் முதல் பெரிய பெரிய தொழில்அதிபர்கள் அனைவரும் Chat GPT பற்றி பேச தொடங்கி உள்ளனர்.
அப்படியா.. என கேட்டால் நீங்கள் முதலில் சாட் ஜிபிடி (ChatGPT)பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அதன் பயன் என்ன? என்பதை தெரிந்து கொண்டால் நீங்கள் நிச்சயம் வியப்பை வெளிப்படுத்துவீர்கள்.
சாட் ஜிபிடி என்றால் என்ன?
அதாவது சாட் ஜிபிடி என்பது ஒரு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் கருவியாகும். அதாவது செயற்கை நுண்ணறிவு கருவி. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான OpenAIல் இருந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாட்ஜிபிடி கருவி என்பது நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கு தாமதம் இன்றி வேகமாக சரியான பதில்களை விரிவாகவும், விளக்கமாகவும் வழங்குகிறது. பொதுவாக நாம் ஏதேனும் சந்தேகம் வந்தால் அதுபற்றி அறிந்தவர்களிடம் கேட்போம். இல்லாவிட்டால் கூகுளில் தேடி அறிந்து கொள்வோம். இப்போது அதற்கு பதிலாக நாம் சாட் ஜிபிடி எனும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் கருவியில் இருந்தே பெற்று கொள்ள முடியும். இதனால் இந்த சாட்ஜிபிடி கூகுளையே வரும் காலத்தில் காலி செய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வியப்பது ஏன்?
இந்த சாட் ஜிபிடி கருவி 2022 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பல லட்சம் பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் இந்த கருவியை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வரும் நிலையில் தான் தற்போது இதுபற்றிய தகவல் டிரெண்டாகி உள்ளது. இதற்கு மேற்கூறிய காரணம் மட்டுமின்றி சாட் ஜிபிடி உதவியுடன் கதை, கட்டுரை ஏன் தேர்வு கூட எழுத முடியுமாம். இது நிச்சயம் வியப்பு ஏற்படுத்துகிறது அல்லவா?. ஆம் அமெரிக்காவில் எம்பிஏ தேர்வை சாட் ஜிபிடி மூலம் மாணவர்கள் எழுதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் தேர்வு முறைகேடு
அதாவது இந்த சாட்ஜிபிடி நாம் கேட்கும் கேள்விகளுக்கு விரிவான முறையில் பதில்களை தருவதோடு, பயனர்கள் உள்ளிடும் கேள்விகளுக்கு விரிவான முறையில் பதில்களை தருகிறது. அதில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் பல வகையான தகவல்களை சேகரித்து மனிதர்கள் போல அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்குகிறது. இதனை பயன்படுத்தி தான் சாட்ஜிபிடி மூலம் அமெரிக்காவில் தேர்வையே எழுதி உள்ளனர்.
பெங்களூர் பல்கலைகழகங்களில் தடை
இந்நிலையில் தான் தற்போது பெங்களூரில் சில பல்கலைக்கழங்களில் சாட் ஜிபிடி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை பயன்படுத்தி பலரும் தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபடலாம் என்பதால் தான் கல்லூரிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூரில் ஆர்வி பல்கலைக்கழகம், தயானந்தா சாகர் பல்கலைக்கழகம், பெங்களூர் இன்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் சாட் ஜிபிடி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் சொல்வது என்ன?
இதுபற்றி ஆர்வி பல்கலைழக்கழகம் சார்பில், ‛‛மாணவர்கள் சாட்ஜிபிடி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தேர்வு எழுத கூடாது. இதை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெங்களூர் இன்டர்நேஷனல் தகவல் தொழில்நுட்ப நிறுவம் (IIIT-B), ‛‛சாட் ஜிபிடி பயன்பாட்டை தடுக்க தனிக்குழு அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல் தயானந்த சாகர் பல்கலைகழகம் சார்பில், ‛‛சாட்ஜிபிடி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் அறிவுத்திறனை குறைக்க வாய்ப்புள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற கல்லூரிகள் ஆலோசனை
இதுதவிர பெங்களூர் கிறிஸ்ட் பல்கலைக்கழகம் உள்பட பிற கல்லூரி, பல்கலைக்கழகங்கள் சாட் ஜிபிடி பயன்படுத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சாட்ஜிபிடி(ChatGPT), கிட்க்யூப்(Github)கேபைலட்( Copilot), பிளாக்பாக்ஸ்( Blackbox) உள்ளிட்ட ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்களையும் மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.