கர்நாடகாவில் குழந்தைகளுக்கும் பரவிய கருப்பு பூஞ்சை பாதிப்பு.. ஒரே நாளில் 20,378 பேருக்கு கொரோனா
பெங்களூர்: கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 20,378 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. இரு குழந்தைகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று கர்நாடகா.
இங்கு முழு லாக்டவுன் நடைமுறையில் இருந்தாலும், காலை 6 மணி முதல் 10 மணிவரை கடைகளை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் போல இங்கு தளர்வுகள் இல்லாத முழு லாக்டவுன் நடைமுறையில் இல்லை.
'நரகத்தில் வாழ்கிறோம், உதவ முடியவில்லை..' கருப்பு பூஞ்சை மருந்து தட்டுப்பாடு.. டெல்லி ஐகோர்ட் வேதனை
கொரோனா கேஸ்கள்
எனவே, கொரோனா பாதிப்பும் வேகமாக குறையவில்லை. லாக்டவுனை நடைமுறைப்படுத்தி ஒரு மாதம் கடந்த பிறகும், நேற்று கர்நாடகாவில், 20,378 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. 382 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரில் பாதிப்பு அதிகம்
பெங்களூர் நகர மாவட்டம்தான், இந்த மாநிலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஒரு நாளைக்கு 27 ஆயிரம் கேஸ்கள் வரை இங்கு பதிவாகின. நேற்றைய நிலவரப்படி, பெங்களூரில் 4734 தொற்று பதிவானது. 213 பேர் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது. பெங்களூரில் இதுவரை 11,59,237 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 13,104 பேர் உயிரிழந்தனர். 1,62,625 நோயாளிகள் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
பிற மாவட்டங்கள்
தற்போதைய நிலவரப்படி, பெங்களூரிலிருந்து மங்களூர் செல்லும் வழியில், சுமார் 150 கி.மீ தொலைவிலுள்ள ஹாசன் மாவட்டம், 2வதாக அதிகம் பாதித்த பகுதியாகியுள்ளது. அங்கு, நேற்று 2,227 கேஸ்கள் பதிவாகியுள்ளன. மைசூரில் 1559 கேஸ்கள், பெல்காமில் 1,171 கேஸ்கள், சித்ரதுர்காவில் 805 கேஸ்கள், தும்கூரில் 773 கேஸ்கள், தென் கனராவில் 727 கேஸ்கள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 809 பரிசோதனைகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டுள்ளன. இதுவரை இந்த மாநிலத்தில் சுமார் 3 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு
பெரும்பாலும் கருப்பு பூஞ்சை நோய்கள் பெரியவர்களுக்கு ஏற்பட்டுள்ளதை பார்த்திருப்போம். ஆனால், கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு பிளாக் பங்கஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறார்கள். ஆனால் இதுவரை அவர்கள் பாதிக்கப்பட்டது அவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது.
நீரிழிவு முக்கிய காரணம்
இந்த நிலையில்தான், கருப்பு பூஞ்சை பாதிப்பு அறிகுறி தென்பட்ட பிறகு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும், பெங்களூர் சிவாஜிநகரிலுள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கும் நீரிழிவு இருப்பதாக கூறப்படுகிறது. நீரிழிவு இருப்பவர்களுக்கு கருப்பு பூஞ்சை எளிதாக தாக்குகிறது. அதிகப்படியாக ஆவி பிடிப்பதும் கருப்பு பூஞ்சை நோய் பரவ ஒரு காரணமாக கூறப்படுகிறது.