"சமையல் தெரியாது! லவ் பண்ண மட்டும் தெரியுமா?" கணவர் வீட்டார் கடுஞ்சொல்! பெண் இறப்பு! தாய் புகார்
பெங்களூர்: பெங்களூரில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் திருமணமான 3 மாதங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இது தற்கொலை அல்ல, வரதட்சிணை கொடுமையால் நடந்த கொலை என அவரது தாய் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரை அடுத்த பேடரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அமுல்யா (23). ஆந்திரஹள்ளி வித்யாமன்யா நகரைச் சேர்ந்தவர் அபிஷேக் (25). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் இருவீட்டாரையும் சமாதானம் செய்த அமுல்யாவும் அபிஷேக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
புதுமணத் தம்பதி 3 மாதங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் திடீரென என்ன நடந்தது என தெரியவில்லை. அமுல்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது இரவு உணவு அருந்துவதற்காக வெளியே அழைத்து செல்வதாக அமுல்யாவிடம் அபிஷேக் கூறிச் சென்ற நிலையில் அன்றைய தினம் அவர் அழைத்துச் செல்லவில்லையாம். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இறந்த அமுல்யாவின் தாய் சுனிதா, "இது தற்கொலை அல்ல. என் மகளை அபிஷேக்தான் கொலை செய்து தூக்கில் மாட்டியிருக்கிறார். அவருக்கு என் மகளின் நடத்தையில் சந்தேகம் இருந்தது. அமுல்யாவை யாருடனும் பேச அனுமதிக்கவில்லை.
அத்துடன் அவரது குடும்பத்தினர் எனது மகளுக்கு வரதட்சிணை கொடுமை கொடுத்தனர். மேலும் "சமைக்க மட்டும் தெரியாது, என் மகனை மயக்க மட்டும் தெரியுமா?" என அபிஷேக்கின் குடும்பத்தினர் கேட்டு என் மகளை மனதளவில் காயப்படுத்தியுள்ளனர். இவ்வாறு தாய் சுனிதா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமுல்யாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பேடரஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அபிஷேக்கிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில்தான் அமுல்யாவின் இறப்புக்கான காரணம் தெரியவரும். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்பதும் தெரியவரும்.












Click it and Unblock the Notifications