என்னங்க இது.. பெங்களூரில் வடியாத வெள்ளம்.. சாலையில் வளைந்து ஓடிய மீன்.. ‛லபக்கென’ பிடித்த மக்கள்!
பெங்களூர்: கர்நாடகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் பெங்களூரில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் பெங்களூரில் சாலையில் மீன்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளம், அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக பெங்களூர், ராமநகர், சாம்ராஜ்நகர், மைசூரு, மண்டியா, துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கிராமப்புறங்களில் ஏரிகள் உடைந்துள்ளதால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பெங்களூரை பொறுத்தமட்டில் கடந்த மாதம் 29ம் தேதி காலை முதல் இரவு வரை கனமழைபெய்தது.

பெங்களூரில் மழை பாதிப்பு
இதனால் பெங்களூர் நகரின் முக்கிய சாலைகளில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. ரப்பர் படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றன. குறிப்பாக மாரத்தஹள்ளி-சர்ஜாபுரா அவுட்டர் ரிங் ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு பெரும் பிரச்சனையாக மாறியது. வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தற்போதும் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

குண்டும் குழியுமாக மாறிய சாலை
மேலும் பெங்களூர் மாநகராட்சியின் பல இடங்களில் மழை வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் ரோடுகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இதுவும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பெங்களூர் மாநகராட்சியை பலர் டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சாலையில் மீன்பிடித்த போட்டோ
இந்நிலையில் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு படம் வேகமாக பரவி வருகிறது. அதில் கையில் ஒருவர் மீன் வைத்திருக்க இன்னொருவர் போட்டோ எடுக்கிறார். மழை வெள்ளத்தில் இந்த மீன் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ‛‛சாலையில் மீன்பிடிக்க வேண்டுமா.. பெங்களூர் வாருங்கள்'' என கூறி வருகின்றனர்.

கர்நாடகத்தில் 820 மிமீட்டர் மழை
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை மழை வெள்ளத்தால் மொத்தம் 7,467 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஜூன் 1 முதல் 820 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் 27 மாவட்டங்களில் உள்ள 187 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதாகவும், மொத்தம் 29,967 மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரில் அதிகம்
இதற்கிடையே தான் பெங்களூரில் தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் அதிக மழை பெய்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது பெங்களூரில் 2017 ல் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 351 மில்லிமீட்டர் மழை பெய்து சாதனை படைத்தது. அதன்பிறகு ஆகஸ்ட் மாதத்தில் அந்த அளவுக்கு மழை பெய்யவில்லை. அதாவது 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் வந்த ஆகஸ்ட் மாதங்களில் பெங்களூரில் பெய்த மழையின் அளவு 200 மில்லமீட்டரை கூட தொடாத நிலையில் தான்தற்போது 2022 ஆகஸ்ட்டில் 239 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications