மஞ்சள் அலர்ட்.. மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் பெங்களூரு?... வெளுத்து வாங்கிய மழை.. அவதியில் மக்கள்
பெங்களூருக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மழைநீர் கொட்டி தீர்த்தது
பெங்களூரு: பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மீண்டும் பெங்களூரு நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது... குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் மழையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
அதனால், பெங்களூருவில் தினமும் கனமழை பெய்து வருகிறது... கடந்த 4 நாட்களுக்கு முன்பு, பெங்களூருவுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது..
வங்கக்கடலில் காற்றழுத்தம்..தீபாவளி வரை இடி மின்னலுடன் கொட்டப்போகும் கனமழை..சூறாவளியும் வீசுமாம்
கனமழை
அதாவது, 60 முதல் 120 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.. அதன்படியே, அடைமழை பெய்து வருகிறது.. நேற்றுமுன்தினம் ராஜாஜிநகர், மெஜஸ்டிக், சேஷாத்திரிபுரம் கே.ஆர்.மார்க்கெட், ஜே.பி.நகர், சாந்திநகர், எம்.ஜி.ரோடு, இந்திராநகர், காட்டன்பேட்டை, விஜயநகர், பசவேஸ்வரா நகர், மைசூரு ரோடு, அக்ரஹாரா தாசரஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு ஆளானார்கள்.. போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
டிராக்டர்
இப்படித்தான், பெங்களூருவில் கடந்த செப்டம்பரிலும் வரலாறு காணாத மழை வெளுத்து வாங்கியது.. அப்போது சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், வீடுகளை வெள்ள நீர்சூழ்ந்தது.. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை அளவுக்கு அதிகமாகவே முடங்கியது.. ஐடி நிறுவன ஊழியர்கள், வெள்ளத்திற்கு நடுவில் டிராக்டர் மூலம் அலுவலகம் சென்ற வீடியோக்கள் சோஷியல் மீடியாவிலும் அப்போது வைரலாக பரவியது.. அந்த பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை..
வெளுத்த மழை
இந்நிலையில், நேற்றிரவு இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்தது.. நேற்று மாலை பெய்த மழை, இரவெல்லாம் வெளுத்து கட்டியது.. கன மழை வெள்ளம் காரணமாக அங்கு மீண்டும் வெள்ள நீர், சாலையில் தேங்கியுள்ளது.. சாலையில் செல்லும் கார்கள், பைக்குகளும் மழைநீரில் மிதந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்... அதேபோல, ஆபீஸ் முடித்துவிட்டு, பல பேர் வீடு திரும்ப முடியாமல் அலுவலகங்களிலேயே முடங்கினர். சாலைகளில் தண்ணீர் தேங்கியது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது, சாலை உள்கட்டமைப்பு சேதம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெங்களூரு நகரின் மத்திய, கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது..
முறிந்த மரம்
இரவு 8.30 மணி முதல் 11.30 மணி வரை பெங்களூரு நகரில் 54.5 மிமீ மழையும், எச்ஏஎல் விமான நிலையத்தில் 71.2 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது... வழக்கமாக பெங்களூருவில் பெய்யும் மழையைவிட இது இரு மடங்கு அதிகம் என்கிறார்கள்.. சேஷாத்ரிபுரம், ஃப்ரீடம் பார்க் மற்றும் பானஸ்வாடி அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி காட்சி அளிக்கின்றன. பானஸ்வாடி ஐயப்பன் கோவில் அருகே மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.. மகாதேவபுரம் & மாரத்தஹள்ளி இடையே, கோரமங்களா, இந்திராநகர் கேஎச் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
மஞ்சள் அலர்ட்
பஸ் ஸ்டாண்டுகளிலும், மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனிலும், கைகளில் குடைகளை பிடித்தவாறு பயணிகள் அவதிக்கு ஆளானார்கள்.. ரயில்வே சுரங்கப்பாதையில் பல வாகனங்கள் மழைநீரில் சிக்கி உள்ளன.. சேஷாத்திரிபுரம் அருகே கனமழை காரணமாக, மெட்ரோ ரயில் தடுப்புச் சுவரின் சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளன.. அதேபோல, அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.. பெங்களூர் நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் இன்றுவரை அதாவது வியாழன்வரை மஞ்சள் அலர்ட் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்ததால், இன்றும் மழை வெளுத்து கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் மழை நின்றதும் அனைத்து சாலை பள்ளங்களும் மூடப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.