மோசமான டிராபிக்.. உலகிலேயே பெங்களூருக்கு முதலிடம்.. டாப் 10ல் 4 இந்திய நகரங்கள்.. வெளியான ரிப்போர்ட்
பெங்களூர்: இதோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகிவிட்டது..! உலகத்திலேயே மிக மோசமான டிராபிக் நெரிசல் கொண்ட நகரம் பெங்களூர் தானாம்.
Tomtom என்ற வாகன போக்குவரத்து நேவிகேஷன் நிறுவனம், 2019 ஆம் ஆண்டில் எந்த நகரம் மிக மோசமாக டிராபிக் நெரிசலில் சிக்கி திணறியது என்பது பற்றி ஒரு ஆய்வு நடத்தியிருந்தது. 6 கண்டங்களில் உள்ள 57 நாடுகளைச் சேர்ந்த 416 நகரங்கள் இதற்காகத் தேர்வு செய்தது.
இந்த அறிக்கை பல சுவாரசியங்களுடன், தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியா டிராபிக் நெரிசலால் விழிபிதுங்க கூடிய நாடுகளில் மிக முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு சலுகை.. பல பொருட்களின் விலை குறைய வாய்ப்பு.. 'பட்ஜெட் 2020' எப்படி இருக்கும்!
4 இந்திய நகரங்கள்
டாப் 10 நெரிசல் மிக்க நகரங்களில் 4 நகரங்கள் இந்தியாவில்தான் அமைந்து உள்ளன. அப்படி, எந்தெந்த நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளன என்பதை பார்க்கலாம் வாருங்கள்: இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படுவது பெங்களூர். இந்த நகரம் தான் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிக மோசமான டிராபிக் நெரிசலால் பாதிக்கப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
71% போக்குவரத்து நெரிசலால் வெளிப்படுகிறதாம் இந்த நகரம்.
மோசமான டிராபிக்
அதிலும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை பெங்களூரு நகர சாலை நெரிசல் வரலாற்றில் மிக மோசமான நாள் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 103 சதவீதம் நெரிசல் ஏற்பட்டதாம் அன்றைய தினம். கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி சனிக்கிழமை பெங்களூர் நகரம் நிம்மதி பெருமூச்சு விட்டு உள்ளது. ஆம் அந்த ஆண்டிலேயே மிகக்குறைவான போக்குவரத்து நெரிசல் தினம் அன்றைய நாள்தான். வெறும் 30% டிராபிக் நெரிசல்தான் பதிவாகி உள்ளது என்கிறது இந்த ஆய்வு அறிக்கை.
பல மணி நேரங்கள்
இதில் இன்னொரு சுவாரஸ்ய விஷயத்தையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, பெங்களூரு நகரில் இரவு 8 மணிக்கு மேல் சாலைகளில் வாகனங்களின் பயணித்தால் ஒரு வருடத்தில் சுமார் 5 மணி நேரத்தை மிச்சம் பிடிக்க முடியும் என்று அசால்டாக கூறுகிறது ஆய்வு. சராசரியாக பெங்களூர் வாசிகள் ஒரு ஆண்டில் 243 மணி நேரம்.., அதாவது 10 நாட்கள் மற்றும் மூன்று மணி நேரத்தை வெறும் ட்ராபிக் நெரிசலில் இழந்து வருகிறார்கள்.
மும்பை, புனே
பெங்களூருக்கு அடுத்தபடியாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் டிராபிக் நெரிசல் அதிகம் இருக்கிறது. அங்கும் 71 சதவீதம் டிராபிக் நெரிசல் பதிவாகியுள்ளது. மோசமான டிராபிக் உள்ள நகரங்களில் டாப் 10ல் நான்காவது இடம் பிடித்துள்ளது வர்த்தக தலைநகர் மும்பை. 5 ஆவது இடமும் அதே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த புனே நகருக்கு கிடைத்துள்ளது. கொலம்பியா நாட்டில் உள்ள போகதா என்ற நகரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
டெல்லி, மாஸ்கோ
நாட்டின் தலைநகர் டெல்லி இந்த விஷயத்தில் எட்டாவது இடம் பிடித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, பெரு நாட்டின் லிமா, துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் மற்றும் இந்தோனேசியா தலைநகர் ஜகார்தா, முறையே ஆறு, ஏழு, ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களை பிடித்துள்ளன. மும்பையை பொருத்தளவில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி 65% டிராபிக் நெரிசல் பதிவாகி உள்ளது. அதுதான் அந்த ஆண்டின் மிக மோசமான நாள்.
மும்பை நிலைமை எப்படி
மும்பைவாசிகள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 250 மணி நேரத்தை டிராபிக் நெரிசலில் செலவிடுகிறார்கள். புனே நகர மக்கள் 193 மணி நேரத்தை இவ்வாறு சாலைகளில் நெரிசலில் சிக்கி செலவிடுகிறார்கள். டெல்லியை பொறுத்தளவில் 190 மணி நேரத்தை இவ்வாறு வீணாக செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்தாலும் கூட டெல்லியில்தான் மற்ற இந்திய நகரங்களை விடவும் அதிகப்படியான கார்கள் இயங்குகின்றனவாம். அதேநேரம் மற்ற நகரங்களைக் காட்டிலும் அங்கு சாலை வசதி சிறப்பாக இருக்கிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.