திடீர் திருப்பம்.. ராகுலை சந்திக்காமல் மைசூரிலேயே தங்கிய சோனியா! பரபர பாரத் ஜோடோ யாத்திரை பின்னணி
பெங்களூர்: கர்நாடகாவில் அக்டோபர் 6ம் தேதி நடக்கும் பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகம் சென்ற சோனியா காந்தி திட்டமிட்டபடி ராகுல் காந்தியை சந்திக்காமல் மைசூரிலேயே தங்கினார். இதன் பின்னணியில் உள்ள விபரம் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை துவங்கி உள்ளார்.
கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். காஷ்மீர் வரை செல்லும் இந்த நடைபயணத்தில் ராகுல் காந்தி 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களைக் கடந்து 3,500கி.மீ தொலைவுக்கும் நடக்க உள்ளார்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரை...கர்நாடகாவில் நாளை இணையும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி!
கர்நாடகத்தில் யாத்திரை
தமிழகத்தின் கன்னியாகுமரியில் துவங்கிய இந்த யாத்திரை கேரளா வழியாக கர்நாடகத்தை அடைந்துள்ளது. கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த யாத்திரை மூலம் காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தி உள்பட மூத்த தலைவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
சோனியா காந்தி பங்கேற்பு
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி துவக்க விழா உள்பட நடைப்பயணத்தில் இதுவரை பங்கேற்கவில்லை. உடல்நல பாதிப்பால் அவரால் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் தான் சோனியா காந்தி வரும் 6ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க உள்ளார்.
கர்நாடகா பயணம்
அதாவது பாரத் ஜேடோ யாத்திரையில் பங்கேற்பதற்காக மைசூர் வரும் சோனியா காந்தி குடகில் தங்குவார். அதன்பிறகு அவர் அக்டோபர் 6ம் தேதி குடகு மாவட்டத்தில் நடக்கும் யாத்திரையில் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. அதன்படி குடகு மாவட்டம் மடிக்கேரி அருகே தனியார் ரெசார்ட்டில் முன்பதிவு செய்யப்பட்டது. இங்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மைசூரில் தங்கும் சோனியா
இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி நேற்று கர்நாடகம் வந்தார். மைசூர் விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர். இவர் 2 நாட்கள் குடகில் தங்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. மோசமான வானிலை காரணமாக அவர் குடகுக்கு செல்லவில்லை. மாறாக மைசூரிலேயே அவர் தங்கி உள்ளார். இதனால் திட்டமிட்டபடி நேற்று குடகில் உள்ள ரெசார்ட்டில் ராகுல் காந்தி-சோனியா காந்தி இடையேயான சந்திப்பு நடக்கவில்லை.