எடியூரப்பா மகனுக்கு இத்தனை எதிர்ப்பா?கர்நாடகா பாஜகவுக்கு மொத்தமாக வாய்ப்பூட்டு போட்ட டெல்லி மேலிடம்!
பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக தலைவராக எடியூரப்பா மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டதற்கு எதிராக மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியை கொட்டி வருகின்றனர். இதனையடுத்து விஜயேந்திரா நியமனம் தொடர்பாக ஊடகங்களில் யாருமே கருத்து தெரிவிக்கவே கூடாது என பாஜக மேலிடம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. தென்னிந்தியாவில் ஒரே மாநிலத்தில் நடைபெற்ற ஆட்சியையும் பாஜக, காங்கிரஸிடம் பறிகொடுத்தது. கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்து 7 மாதங்கள் கடந்துவிட்டன.

ஆனால் கர்நாடகா பாஜகவுக்கு 7 மாதங்களாக மாநில தலைவர் நியமிக்கப்படவில்லை. சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நளின் குமார் கட்டீல் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய மாநில தலைவர் பதவிக்கு பல தலைவர்கள் போட்டி போட்டனர். இதனால் யாரை தலைவராக நியமிப்பது என டெல்லி மேலிடம் ரொம்பவே குழம்பி போனது. ஒருவழியாக தற்போது எடியூரப்பா மகன் விஜயேந்திரா, கர்நாடகா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் எடியூரப்பா மகனை பாஜக தலைவராக நியமித்ததற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பாஜக தலைவர் பதவியை ரொம்பவே எதிர்பார்த்திருந்த சிடி ரவி, இந்த நியமனம் தொடர்பாக எனக்கும் கேள்விகள் இருக்கின்றன. ஆனால் இந்த கேள்விகளை ஊடகங்களில் பேச முடியாது என்றார். மற்றொரு மூத்த தலைவரான சோமண்ணா, பாஜகவை விட்டே விலகி காங்கிரஸில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இன்னொரு பக்கம், மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து வரும் 17-ந் தேதி முடிவெடுக்கப்பட உள்ளது.'
இந்நிலையில்தான் கர்நாடகா பாஜக விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் யாரும் கருத்து தெஇவிக்க கூடாது என டெல்லி மேலிடம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாம். விஜயேந்திராவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதை உணர்ந்து கொண்ட பாஜக மேலிடம் இந்த தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறதாம். கர்நாடகா மாநில பாஜக தலைவராக விஜயேந்திரா நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் அதிருப்தி தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications