பெங்களூரு மேயர் தேர்தல்: பாஜகவின் கவுதம் குமார் ஜெயின் வெற்றி
பெங்களூரு: பெங்களூரு மாநகர மேயர் தேர்தலில் பாஜகவின் கவுதம் குமார் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார். பெங்களூரு மாநகரின் 54-வது மேயராக தேர்வாகி உள்ளார் கவுதம் குமார்.
பெங்களூரு மாநகராட்சி மேயராக காங்கிரஸின் கங்காம்பிகே, துணை மேயராக ஜேடிஎஸ்-ன் பத்ரேகவுடா பதவியில் இருந்தனர். இவர்களது பதவிக் காலம் முடிவடைந்ததால் பெங்களூரு மேயர், துணை மேயர் தேர்தல் கடந்த 27-ந் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
பின்னர் அக்டோபர் 1 (இன்று) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேயர் பதவியை கைப்பற்ற பாஜகவில் கடும் போட்டி நிலவியது. பெங்களூரு மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி, கவுன்சிலர்கள் மஞ்சுநாத் ரெட்டி, எல்.சீனிவாஸ் என ஒரு பெரும் பட்டாளமே மேயர் பதவிக்கு முட்டி மோதியது.
இதனால் மேயர் பதவிக்கு ஒருமனதாக பா.ஜனதா கவுன்சிலர் ஒருவரை தேர்வு செய்ய முடியாமல் இருந்தது. இன்று காலை மேயர் தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் அதிருப்தி வேட்பாளராக பத்மநாபரெட்டி தாக்கல் செய்த வேட்புமனு இன்று காலை வாபஸ் பெறப்பட்டது.
பெங்களூர் மேயர் பதவியில் வெற்றி பெற 129 வாக்குகள் தேவை. பெங்களூரு எல்லைக்குட்பட்ட எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சிக்கள் மற்றும் எம்.பி.க்கள் என மொத்தம் 257 பேர் இத்தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு.
இன்றைய தேர்தலில் பாஜகவின் கவுதம் குமார் 129 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பெங்களூர் துணை மேயராக ராம்மோகன் ராஜூ தேர்வு பெற்றார்.
இத்தேர்தலில் பாஜக ராஜ்யசபா எம்பியான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ராஜ்யசபா எம்பியான ஜெய்ராம் ரமேஷ், பெங்களூரு புறநகர் லோக்சபா தொகுதி எம்.பி. சுரேஷ் உள்ளிட்டோர் வாக்களிக்கவில்லை