கர்நாடகாவில் பாஜகவின் அசுர வளர்ச்சி.. 1983 டூ 2023.. தேர்தல் பிளாஸ்பேக்!
பெங்களூரு: கர்நாடகாவில் 1983ல் 18 இடங்களில் வென்ற பாஜக இன்று (2023ல்) ஆட்சியில் இருக்கிறது. கடந்த 30 வருடங்களில் பாஜக எப்படி வளர்ந்தது என்பதை பார்ப்போம்.
1980ம் ஆண்டு உருவான பாஜக (அதற்கு முன் ஜனசங்கமாக இருந்தது) கட்சி, அடுத்த 3 ஆண்டுகளில் கர்நாடகாவில் 18 இடங்களில் வென்றது. அதன்பிறகு 1985இல் நடந்த தேர்தல் வெறும் இரண்டு இடங்களில் தான் வென்றது. அப்போது கர்நாடகாவில் பாஜகவின் வாக்கு சதவீதம் 3.88% ஆக இருந்தது. ஆனால் 1989ல் கொஞ்சம் உயர்ந்தது. 4 இடங்களில் வென்ற பாஜக, 4.14% வாக்குகளை பெற்றது.

ஆனால் அத்வானியின் ரத யாத்திரைக்கு பின் அப்படியே பாஜகவின் வாக்கு வாங்கி பெரிய அளவில் வளர்ந்தது. 1994 இல் நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் 40 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 16.99 சதவீதம் வாக்குகளை பெற்றது. 1999ம் ஆண்டு தேர்தலில் 44 இடங்களை வென்ற பாஜக 20.69 சதவீதம் வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
2004ல் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 79 இடங்களில் வென்று தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை கர்நாடகாவில் அமைத்தது. முதலில் காங்கிரஸ் சார்பில் தரம்சிங் முதல்வராக இருந்தார். இந்நிலையில் பாஜக உடன் கைகோர்த்த குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். பிஎஸ் எடியூரப்பா துணை முதல்வராக இருந்தார். ஆனால் சொன்னபடி 20 மாதங்கள் கழித்து முதல்வர் பதவியை எடியூரப்பாவிற்கு குமாரசாமி விட்டுக்கொடுக்க மறுத்தார். இதனால் பாஜக, குமாரசாமியின் கட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. 2008ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 110 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதலில் முதல்வராக எடியூரப்பாவும், பின்னர் சதானந்தா கவுடாவும், அதன்பின்னர் ஜெகதீஷ் ஷெட்டரும் முதல்வராக இருந்தனர்.

2013ல் எடியூரப்பா தனியாக பிரிந்து போனதால் காங்கிரஸ் வெற்றி எளிதானது. காங்கிரஸ் 122 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாஜகவோ வெறும் 40 இடங்களில் தான் வென்றது. காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா ஐந்து வருடங்கள் கர்நாடகாவின் முதல்வராக இருந்தார். 2018ம் நடந்த தேர்தலில் பாஜக 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் வென்று இருந்தது. ஆனால் ஜேடிஎஸ் கட்சி 38 இடங்களில் வென்றிருந்த போதிலும் காங்கிரஸ் உதவியுடன் ஆட்சியில் ஏறியது. குமாரசாமி முதல்வரானார். எடியூரப்பாவின் முதல்வர் கனவு அப்போது தகர்ந்தது.
ஆனால் அடுத்த ஒரே வருடத்தில் நிலைமை மாறியது. சில காங்கிரஸ் , ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகினர். இதனால் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைத்தது. எடியூரப்பா முதல்வரானார். அப்போது நடந்த இடைத்தேர்தலில் 12 இடங்களில் வென்ற பாஜக, 116 எம்எல்ஏக்களுடன்பெரும்பான்மை பெற்றது.கடந்த 4 வருடங்களில் கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. தற்போது பசவராஜ் பொம்மை முதல்வராக இருக்கிறார்.
அத்வானியின் ரத யாத்திரை கர்நாடகாவில் பாஜக வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல் எடியூரப்பாவும் கர்நாடகாவில் பாஜக வளர முக்கிய காரணமாக இருந்தார். தற்போது பிரதமர் மோடியின் புகழும் பாஜகவின் வளர்ச்சிக்கு பெரிய உதவியாக உள்ளது. இப்போது பாஜக கர்நாடகாவில் பிரதமர் மோடியின் புகழ் மற்றும் பிரச்சார வியூகத்தை நம்பித்தான் களம் இறங்கி உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications