கர்நாடக தேர்தல் முடிவு..இனி பாஜகவுக்கு அந்த துணிவு இருக்காது.. உமர் அப்துல்லா சொல்றதை கவனிச்சீங்களா

பாஜக ஆட்சி நடைபெற்று வந்த கர்நாடகாவில் கடந்த 10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 224 தொகுதிகளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 73.91 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெறத்தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானாவை கர்நாடாகவில் தொங்கு சட்ட சபை அமைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
இதனால், தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எகிறியது. தேர்தலில் பாஜக - காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு சுற்று வாக்குகள் எண்ண எண்ண காங்கிரஸ் கட்சி வீறு நடை போட்டு முன்னேற தொடங்கியது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி முகம் கண்டுள்ளது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எளிதாக கடந்து இருப்பதால் அங்கு எந்த சிக்கலும் இன்றி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. தோல்வியை ஒப்புக்கொள்வதாக அறிவித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, தோல்விக்கு நானே முழு பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா இது குறித்து தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் தற்போதைக்கு இனி சட்டமன்ற தேர்தலை நடத்தும் துணிவு பாஜகவிற்கு வராது' என்று பதிவிட்டு இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு கஷ்மீர் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் தற்போது ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது.












Click it and Unblock the Notifications