முதல்வர் பசவராஜ் பொம்மை சொந்த மாவட்டத்தில் தோற்ற பாஜக.. எடியூரப்பா கோஷ்டி உற்சாகம்.. என்ன நடந்தது?
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற 2 சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கிய கட்சிகளுக்கும் கலவையான ரிசல்ட்டை பரிசாக கொடுத்துள்ளன.
ஆளும் பாஜக சிந்தகி தொகுதியில் அமோக வெற்றி பெற்றது, ஆனால் முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல்லில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி
இரண்டு இடங்களிலும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் வியூகம் பலிக்கவில்லை.
சுற்றுப் பயணம் செல்லும் எடியூரப்பா
இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய முன்னாள் முதல்வரும் பாஜக சீனியர் தலைவருமான எடியூரப்பா, கர்நாடகாவில் உள்ள அனைத்து பாஜக தொண்டர்களையும், நான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று சந்தித்து 15 முதல் 20 நாட்களுக்குள் கட்சியை பலப்படுத்தும் பணிகளை துவங்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமை குறுக்கீடு
எடியூரப்பா செப்டம்பர் மாதம் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். ஆனால் கட்சித் தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பாஜக ஒரு தொகுதியில் தோற்ற நிலையில் தனது செயல் திட்டத்தை கையில் எடுக்க இதுதான் நல்ல நேரம் என நினைக்கிறார் எடியூரப்பா.
சீனியர்கள் புறக்கணிப்பு
2019ல் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அங்கிருந்து பாஜகவுக்கு தாவி வந்தவர்கள் இந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவரும், லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவருமான ஜெகதீஷ் ஷெட்டர் புறக்கணிக்கப்பட்டார். பல சீனியர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதை பாஜக ஆதரவு வாக்காளர்கள் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
முஸ்லீம்கள் வாக்கு
முன்னாள் முதல்வரின் மகனும் தற்போதைய மாநில பாஜக துணைத் தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா பிரசாரம் செய்ய சென்றபோதும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. 3 நாட்களுக்கு பதில் ஒரு நாள் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஹனகல்லில் உள்ள தலைவர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவிற்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இரண்டு இடங்களிலும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் மஜத நடவடிக்கை போன்றவை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முஸ்லீம்கள் வாக்குகளை பாஜகவிற்கு கொண்டுவராமல் தடுத்து விட்டது என்ற பேச்சும் இருக்கிறது.
காங்கிரஸ் பதில் வியூகம்
காங்கிரஸின் தலைமைக் கொறடா அஜய் சிங் கூறுகையில், முஸ்லீம் வாக்குகளை பிரித்து காங்கிரசை தோற்கடித்த மஜத வியூகம் அமைத்தது. ஆனால் இந்த திட்டத்தை அம்பலப்படுத்தும் வகையில், சித்தராமையா சிறுபான்மை சமூகத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். இதனால் முஸ்லீம்கள் விழிப்புணர்வோடு, வாக்குகள் சிதறுவதை தவிர்த்தனர் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவலி
ஹனகலில் ஏற்பட்ட ஏமாற்றம் பாஜகவை துவள வைக்க காரணம், முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதோடு மட்டுமல்ல, பல பாஜக சீனியர் தலைவர்களுக்கு நெருக்கமான தொகுதியும் கூட. எடியூரப்பா தொகுதியான ஷிகாரிபுரா, இங்கிருந்து 50 கிமீ தொலைவில்தான் உள்ளது. பக்கத்து ஹிரேகேரூர் தொகுதியைச் சேர்ந்தவர்தான் மாநில விவசாய அமைச்சர் பி.சி. பாட்டீல், அருகேயுள்ள எல்லப்பூர் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், தொழிலாளர் துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார். சுற்றியுள்ள பல தொகுதிகளிலும் பாஜக சீனியர்கள்தான் எம்எல்ஏக்களாக உள்ளனர்.
பசவராஜ் பொம்மை பேட்டி
அதேநேரம், முதல்வர் பசவராஜ் பொம்மை, இந்த விமர்சனங்களிடமிருந்து தப்பியோடுகிறார். அவர் அளித்த பேட்டியில் "கடந்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் மானே செய்த மக்கள் பணிகள் காரணமாக அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பாஜகவுக்கு எதிரான அதிருப்தி இல்லை" என்று கூறினார் பசவராஜ் பொம்மை.
எடியூரப்பா ஆதரவு
சமீபத்தில்தான் எடியூரப்பாவை வயது மூப்பு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக வைத்தது பாஜக தலைமை. இதன்பிறகு பசவராஜ் பொம்மை முதல்வராக்கப்பட்டார். அதன் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் எடியூரப்பாவுக்கு பெரிய முக்கியத்துவத்தை பாஜக தலைமை தரவில்லை. எனவேதான், ஹனகல் தொகுதியில் பாஜக பெற்ற தோல்வி எடியூரப்பா ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்கிறார்கள். பசவராஜ் பொம்மை தனது ஆதரவு வட்டத்தை அதிகரிக்க வேண்டிய தேவையையும் இது சுட்டிக் காட்டுகிறது.