ஒரே ஒரு நாயை.. ரூ.20 கோடி தந்து வாங்கிய பெங்களூர் தொழிலதிபர்.. ஏன் இவ்வளவு? காரணம் இருக்கு மக்களே!
பெங்களூர்: ஓநாயையே கொன்று வீழ்த்தும் திறன் கொண்ட 'காகேசியன் ஷெப்பர்டு' நாயை ரூ.20 கோடி கொடுத்து பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கியிருக்கிறார்.
ஒரு மிகப்பெரிய ஆடம்பர பங்களாவை விட அதிக விலை கொண்ட இந்த நாய் தான் உலகிலேயே மிகப்பெரிய நாய் இனங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது.
ரஷ்யா, ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த காகேசியன் ஷெப்பர்டு நாயை, இந்தியாவில் மிக மிக அரிதாகவே காண முடியும்.

'ஓநாய் கொலையாளி' காகேசியன் ஷெப்பர்டு
உலக அளவில் பல வகையான நாய்கள், மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் ரசனைக்கும், தேவைக்கும் ஏற்ப அவர்கள் நாய்களை தேர்ந்தெடுத்து வளர்க்கின்றனர். அழகுக்காகவும், கவுரவத்துக்காகவும் வளர்க்கப்படும் நாய் இனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதே சமயத்தில், காவலுக்காகவும், ஆக்ரோஷத்திற்காகவும் வளர்க்கப்படும் நாய் இனங்களும் இருக்கின்றன. அவற்றில் அல்சேஷன், ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர் மேன், பிட்புல் போன்ற நாய்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இவற்றை விட அளவிலும், ஆக்ரோஷத்திலும் பல மடங்கும் அதிகம் கொண்ட நாய் தான் காகேசியன் ஷெப்பர்டு (caucasian shepherd). ரஷ்யா, ஜார்ஜியா, அர்மேனியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் இந்த நாயை, ஆட்டு மந்தையையும், ஒட்டக மந்தையையும் ஓநாய் உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து காவல் காப்பதற்காக வளர்க்கப்படுகின்றன. 5 அடி உயரமும் (சாதாரணமாக நடக்கும் போது), துளியும் அச்ச உணர்வும் இல்லாத இந்த நாய், காட்டு ஓநாய்களையே கொன்றுவிடும். எனவேதான், இதற்கு wolf killer (ஓநாய் கொலையாளி) என்ற பெயரும் இருக்கிறது.

பெங்களூர் தொழிலதிபர்
இந்தியாவில் மிக மிக அரிதாகவே இந்த நாய் வளர்க்கப்படுகிறது. காரணம், இந்த நாயின் மீதான பயமும், அதன் விலையும் தான். இதன் விலை கோடியில் தான் ஆரம்பிக்கும். இதனால் இந்தியாவில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே இந்த காகேசியன் ஷெப்பர்டு நாயை வளர்த்து வருகிறார்கள். தற்போது அந்தப் பட்டியலில் பெங்களூர் தொழிலதிபர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார்.

ஒரே நாய்.. ரூ.20 கோடி..
இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரும், பெங்களூரில் உள்ள கடபோம்ஸ் கென்னல்ஸ் என்ற நாய் விற்பனை கடையின் உரிமையாளருமான சதீஷ்தான் இந்த காகேசியன் ஷெப்பர்டு நாயை ரூ.20 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த தனது நண்பரிடம் இருந்து சதீஷ் இந்த நாயை வாங்கியுள்ளார். 6 மாதக் குட்டியாக இருந்த போது வாங்கிய அந்த நாய்க்கு தற்போது ஒன்றரை வயதுதான் ஆகிறது. ஆனால் அதற்குள்ளாக 3 அடிக்கும் மேல் வளர்ந்துவிட்டது. தற்போது அவர் அந்த நாயின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு நாய்களின் பிரியர்
இதுகுறித்து சதீஷ் கூறுகையில், "வெளிநாட்டு நாய்கள் மீது எனக்கு கொள்ளை பிரியம். அதிலும் ஆக்ரோஷம் மிகுந்த நாய்கள் எனறால் வாங்காமல் இருக்கவே மாட்டேன். இப்போது எனது வீட்டில் கொரியன் தோசா மஸ்தீப் (ரூ.1 கோடி), அலாஸ்கன் மலாமூட் (ரூ.8 கோடி), திபெத்தியன் மஸ்தீப் (ரூ.10 கோடி) ஆகிய வெளிநாட்டு நாய்களை வளர்த்து வருகிறேன். இந்தியாவில் பலருக்கு காகேசியன் ஷெப்பர்டு நாயை பற்றி தெரியவில்லை. எனவே, இந்தியாவில் இந்த நாயை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த நாயை வாங்கினேன்" என்றார்.












Click it and Unblock the Notifications