காவிரி: தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடகா பந்த்- 144 தடையை மீறி போராட்டம்- இயல்பு வாழ்க்கை முடக்கம்!
பெங்களூர்: காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூர், மைசூர் நகரங்களில் 144 தடை உத்தரவை மீறி கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு, வறட்சி நிலவுவதால் காவிரி நீரை திறக்க மறுத்தது. காவிரி மேலாண்மை ஆணையமும் கூடி இது குறித்து விவாதித்தது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்றமும் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க உத்தரவிட்டது. இதனை கன்னட விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் எதிர்த்தன. கர்நாடகா அரசு சொற்ப நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டது.
காவிரியில் 3,000 கன அடி நீர்: இதனைத் தொடர்ந்து செப்டமப்ர் 28-ந் தேதி முதல் காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. இதனை கர்நாடகா ஏற்க மறுத்துவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது.
கர்நாடகாவில் போராட்டம்: காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட திறக்கக் கூடாது என்பது கன்னட அமைப்புகள், விவசாயிகள் நிலைப்பாடு. இந்த சட்டவிரோத நிலைப்பாட்டுக்கு கர்நாடகா பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மண்டியா, பெங்களூர் பந்த்: ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர் பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்டியா, பெங்களூர் பந்த் போராட்டங்களும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இன்று கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.
கர்நாடகா பந்த்: கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. சுமார் 2,000 அமைப்புகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக அறிவித்திருந்தன.
144 தடை உத்தரவு: கர்நாடகா பந்த் போராட்டத்தால் பெங்களூர், மைசூர் நகரங்களில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஆனால் தடையை மீறி கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
தமிழ்நாடு எல்லையில் போராட்டம்: இன்று காலையிலேயே தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளி அருகே கன்னட அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு தமிழ்நாட்டுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கர்நாடகா பந்த் போராட்டத்தால் தமிழ்நாட்டு வாகனங்கள் கர்நாடகாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் வெறிச்சோடின: பெங்களூர் மாநகரில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் யாரும் பயணம் செய்யாததால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கோலாரில் முழு அடைப்பு: தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலாரிலும் கன்னட அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன. பெங்களூர் மாநகரில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகாவின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications