தமிழ்நாட்டின் காவிரி உரிமையை காவு எடுக்க கர்நாடகா காங்- பாஜக கூட்டணி? டெல்லி அனுப்பிய 'அஜீத் குழு'!
பெங்களூர்: கர்நாடகா ஆளும் காங்கிரஸ் அரசின் பஞ்சப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அம்மாநிலத்துக்கு வறட்சியை பார்வையிடும் மத்திய குழுவை அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறக்காமல் இருக்க மத்திய குழுவை கர்நாடகா அரசு ஆயுதமாக கையில் எடுக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை தராமல் துரோகம் செய்கிறது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டிய கேஆர்எஸ் அணையில் 100 அடி நீர் உள்ளது; கபினி அணையிலும் முழு கொள்ளளவை எட்ட 4 டிஎம்சி நீர் தேவை என்பது இன்றைய நிலவரம். ஆனாலும் கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது என பஞ்சப்பாட்டை இடைவிடாமல் கர்நாடகா பாடி வருகிறது.

கர்நாடகாவின் இந்த கபட நாடகத்துக்கு ஒத்து ஊதுவதைப் போல மத்தியில் ஆளும் பாஜக அரசு, உடனடியாக அம்மாநிலத்துக்கு ஒரு மத்திய குழுவை அனுப்பி வைத்துள்ளது. கர்நாடகாவின் மொத்தம் உள்ள 236 தாலுகாக்களில் 195-ல் வறட்சி நிலவுகிறது என்பது கர்நாடகாவின் அறிவிப்பு. இதனால் மத்திய குழுவை கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டும் என அம்மாநில ஆளும் காங்கிரஸ் அரசு வலியுறுத்தியது. இதனையே தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாடாகவும் முன்வைக்கிறது கர்நாடகா.
இந்நிலையில்தான் கர்நாடகாவில் வறட்சி நிலைமையை ஆய்வு செய்ய மத்திய விவசாயத்துறை இணைச் செயலாளர் அஜீத்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழு கர்நாடகாவில் முகாமிட்டுள்ளது. இக்குழு முதல்வர் சித்தராமையாவை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகாவுக்கு வறட்சியால் ரூ30,432 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; ஆகையால் மத்திய அரசு ரூ4,860 கோடி நிவாரணம் தர வேண்டும் என சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுகிறது. ஒட்டுமொத்தமாக கர்நாடகாவின் அனைத்து தாலுகாக்களிலும் வறட்சி வாட்டி வதைக்கிறது. தென்மேற்கு பருவமழையும் பொய்த்துவிட்டது. இதனால் குடிநீர் பஞ்சம் அபாயம் உருவாகி வருகிறது. விவசாயிகளுக்கான பயிர் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும் என்றார் சித்தராமையா. இதனைத் தொடர்ந்து மத்திய குழுவின் 10 அதிகாரிகளும் 3 குழுவினராகப் பிரிந்து வறட்சி பாதித்த பகுதிகளை இன்று முதல் ஆய்வு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications