முக்கிய கட்டத்தை நெருங்கியது.. சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டுள்ள சந்திரயான் 3 விண்கலம், தற்போது நிலவை நெருங்க தொடங்கியுள்ளது. 'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக லேண்டர் பிரிந்தது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, கடந்த 2019 ம் ஆண்டு சந்திரயான்-2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2, 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. இருந்த போதிலும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

இருந்தாலும் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான் - 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், அது தனது இறுதி இலக்கினை அடைய பல்வேறு படிநிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது. அதாவது, நிலவை நோக்கி இந்தியாவின் சாதனைப் பயணத்தை செய்துகொண்டு இருக்கும் சந்திராயன் 3 விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்த பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்கு சென்று அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கி தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பூமியின் சுற்று வட்டப்பாதையை நிறைவு செய்த சந்திரயான் விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் தற்போது பயணித்து வருகிறது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குச் சென்றவுடன் சந்திரயான்-3-ன் உயரமானது படிப்படியாகக் குறைக்கப்பட்டு நிலவில் தரையிறக்கும் நடவடிக்கைகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 14-ந் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் விண்கலத்தில்ன் உயரம் குறைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. குறைந்த பட்சம் 151 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 179 கி.மீ. என்ற சுற்றுப்பாதையிலும் சந்திரயான் 3 விண்கலம் சுற்றி வந்தது. இதனைத் தொடர்ந்து தொடர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மீண்டும் உயரம் குறைக்கப்பட்டது. அப்போது , குறைந்தபட்சம் 153 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 163 கி.மீ. என்ற அளவிலும் நிலவினை சந்திரயான் 3 சுற்றி வந்தது.
தற்போதைய சூழலில், நிலவின் 100 கிலோ மீட்டர் தொலைவிலான அடுக்குக்குள் 'சந்திரயான்-3' கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனிடையே, இன்று சந்திரயான் -3 திட்டத்தின் மிக முக்கிய பணி இன்று நடைபெற்றது. அதாவது, விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து தரையிறங்கும் லேண்டரை இருந்து லேண்டர் தனியாக பிரிக்கும் நடவடிக்கையை விஞ்ஞானிகள் இன்று தொடங்கினர்.

அதன்படி, விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. அதன்பிறகு இரண்டும் தனித்தனி பயணங்களை தொடங்கியது. நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலம் வரும் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் செயல்பாடுகளை பெங்களூரில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நாளை மாலை 4 மணிக்கு லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications