சித்தராமையா முதல்வர் பதவிக்கு ஆபத்து? காங்கிரஸ் மேலிடம் சம்மன்- டெல்லிக்கு ஓடும் சித்து, சிவகுமார்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது அடுத்தடுத்து ஏராளமான முறைகேடுகள் புகார்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. காங்கிரஸ் அரசுக்கு எதிராக கர்நாடகா பாஜக பாதயாத்திரை நடத்துவதாகவும் அறிவித்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் மேலிடம் அவசரமாக அழைத்ததால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் டெல்லி விரைகின்றனர். கர்நாடகா முதல்வர் பதவி மாற்றம் அல்லது அமைச்சரவை மாற்றம் குறித்து டெல்லி ஆலோசனையில் விவாதிக்கப்படலாம் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றியது முதலே காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவகுமார் தலைமையில் இரண்டு கோஷ்டிகள் பகிரங்கமாக செயல்பட்டு வருகின்றன. சித்தராமையா அமைச்சரவையிலும் இந்த இரு கோஷ்டிகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் எப்படியாவது முதல்வர் பதவியைப் பெறுவதற்கு டிகே சிவகுமார் தீவிரம் காட்டுகிறார். டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவியை தரவிடாமல் தடுக்க துணை முதல்வர்கள் பதவி கேட்கின்றனர் சித்தராமையா கோஷ்டி அமைச்சர்கள்.
இந்த நிலையில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு மீது அடுத்தடுத்த ஊழல் புகார்கள் வரிசைகட்டி வருகின்றன. வால்மீகி வாரிய நிதி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் நாகேந்திரா பதவி இழந்தார். பின்னர் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனையடுத்து முதல்வர் சித்தராமையா மனைவிக்கு 14 மனைகள் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய கோருகிறது பாஜக.
அத்துடன் சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி பெங்களூர்- மைசூர் பாதயாத்திரை நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் பாதயாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்கிறது சித்தராமையா அரசு.
இந்த நிலையில் இன்று திடீரென சித்தராமையா, டிகே சிவகுமார் இருவரும் டெல்லி செல்கின்றனர். கர்நாடகா காங்கிரஸ் அரசு மீதான அடுத்தடுத்த புகார்கள் குறித்து டெல்லியில் காங்கிரஸ் மேலிடம் விசாரணை நடத்தக் கூடும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனைகளின் போது முதல்வர் சித்தராமையாவை மாற்றுவது அல்லது அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்பதால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications