கொரோனா: பச்சை மண்டலங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தியது கர்நாடகா- ஷாப்பிங் மால்கள் தவிர!
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் 14 மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் 30 மாவட்டங்கள், கொரோனா பாதிப்பு அடிப்படையில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சிவப்பு மண்டலத்தில் 6 மாவட்டங்கள், ஆரஞ்சு மண்டலத்தில் 5, மஞ்சளில் 5, பச்சையில் 14 மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் பச்சை மண்டலத்தில் இடம்பெற்றிருக்கும் 14 மாவட்டங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நிபந்தனைகளுடன் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. சாம்ராஜ்நகர், கோப்பல், சிக்மகளூரு, ராய்ச்சூர், சித்ரதுர்கா, ராமநகரா, ஹாசன், சிவமோஹா, ஹவேரி, யாத்கிர், கோலார், தேவன்கரே, உடுப்பி மற்றும் கொடகு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இக்கட்டுப்பாடு தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். பெங்களூரு நகரம், பெலகாவி, மைசூரு, விஜயபுரா, பாகல்கோட், கல்புர்கி, பிதார், தக்ஷிண கன்னடா ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் எந்த வித மாற்றமும் இல்லாமல் தொடரும். இதனடிப்படையில் பச்சை மண்டலப் பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்கும், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் இயக்கப்படலாம், சமூக இடைவெளி, முக கவசம் அணிந்து பணியாற்றும் வகையில் அனைத்து கடைகளும் திறக்கப்படலாம் .
அதேநேரத்தில் ஷாப்பிங் மால்களை பச்சை மண்டலப் பகுதிகளில் திறப்பதற்கு கர்நாடகா அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications