கோவையிலிருந்து கர்நாடகா, கேரளாவுக்கு அரசு பஸ்கள் ரத்து.. பிற நகரங்களிலிருந்து பஸ் இயக்கம் குறைப்பு
பெங்களூர்: தமிழகத்தில் இருந்து பெங்களூரு உட்பட கர்நாடக நகரங்களுக்கு இயக்கக்கூடிய பஸ்கள் இயக்கத்திற்கு தடை விதித்ததாக கூறி ஒரு தகவல் பரவி வருகிறது. அதேநேரம், கோவை கோட்டத்தில் இயங்கும் பஸ்களுக்கு மட்டும் இதுபோல தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள எல்லையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை, சேலம், மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் பெங்களூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர மைசூர் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் தமிழக பேருந்துகள் வந்து செல்கின்றன, இந்த நிலையில் பெங்களூரில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 14 பேர் அங்கு சிகிச்சையெடுத்து வருகிறார்கள்.

இது குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்து வருகிறது. சர்வதேச விமானங்கள் எதுவுமே பெங்களூரு விமான நிலையத்திற்கு இன்று முதல் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கர்நாடக மாநிலம் குல்பர்கா நகருக்குள் தனியார் பஸ்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இங்கு தான் நாட்டிலேயே முதல் முறையாக வைரஸ் தாக்கி, ஒரு முதியவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில் பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலத்திற்கு தமிழக பஸ்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை முதல் ஒரு தகவல் பரவியது.

அதற்கேற்ப கர்நாடக சாலைகளில் தமிழக பஸ்களை பார்ப்பதும் அரிதாகி இருந்தது. இது தொடர்பாக சேலம் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் கூறுகையில், கர்நாடகாவுக்கு தமிழக பஸ்களை இயக்க வேண்டாம் என்று எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அரசு விரைவுப் பேருந்துகள் வழக்கம்போல தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன என்று தெரிவித்தார்.
இயல்பாகவே கோரானா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் பொது போக்குவரத்தை தவிர்க்க தொடங்கி உள்ளதால் பயணிகள் கூட்டம் குறைந்து இயல்பாகவே பஸ்கள் குறைவாக இயக்கப்படுகின்றன. இதை வைத்து, யாரேனும் பஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கலாம் என்று கர்நாடக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், மார்ச் 31ம் தேதிவரை, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கத்தை தடை செய்வதாக கோவை கோட்ட அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. எனவே பொள்ளாச்சி எல்லையில் தமிழக பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கேரளாவிலிருந்து ஒரு சில பஸ்கள் கோவை வந்து செல்கின்றன.












Click it and Unblock the Notifications