‛‛மோடிக்கு அவப்பெயராகனும்’’.. ரூ.100 கோடி பேரம் பேசிய டிகே சிவக்குமார்! கைதான பாஜக பிரமுகர் பகீர்
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக தலைவர் தேவராஜ் கவுடாவை அம்மாநில போலீசார் கைது செய்துள்ள நிலையில், பிரதமர் மோடி, ஜேடிஎஸ் மாநிலத் தலைவருமான எச்.டி.குமாரசாமி மீது அவதூறு கருத்துக்களை பரப்ப கர்நாடக து.முதல்வர் டி.கே.சிவக்குமார் தன்னிடம் ரூ.100 கோடிக்கு பேரம் பேசியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் லோக்சபா தொகுதி மஜத எம்.பியாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக ஷேர் ஆன நிலையில், இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைப்பை அம்மாநில அரசு அமைத்திருக்கிறது.

புலனாய்வு அமைப்பு சமீபத்தில் பாஜகவை சேர்ந்த தேவராஜ் கவுடாவை போலீசார் கைது செய்தது. சொத்து ஒன்றை விற்க உதவி செய்வதாக கூறி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக 36 வயது பெண் அளித்த புகாரில் தேவராஜ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்களை கசிய விட்டதாக தேவராஜ் கவுடா மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது.
இப்படி இருக்கையில், பிரதமர் மோடி, ஜேடிஎஸ் மாநிலத் தலைவருமான எச்.டி.குமாரசாமி மீது அவதூறு கருத்துக்களை பரப்ப கர்நாடக து.முதல்வர் டி.கே.சிவக்குமார் தன்னிடம் ரூ.100 கோடி கொடுத்ததாக தேவராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று தேவராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் வாகனத்திலிருந்து பேட்டியளித்த அவர், இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
"இந்த விவகாரத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் எனக்கு முன்பே ரூ.5 கோடியை கொடுத்திருந்தார். அவர்கள் பிரதமர் மோடிக்கும், எச்.டி.குமாரசாமிக்கும், பா.ஜ.க.வுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பெரிய அளவில் திட்டமிட்டனர். எனக்கு ரூ.100 கோடி வழங்குவதாக கூறினர். முதல்கட்டமாக பவுரிங் கிளப்பில் உள்ள ரூம் எண். 110க்கு ரூ.5 கோடியை முன்பணமாக அனுப்பினார்கள். இது தொடர்பாக பேரம் பேச, சன்னராயப்பட்டணாவைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் கோபாலசாமி அனுப்பப்பட்டார்.
ஆனால், நான் அவர்களுடைய ஆஃபரை மறுத்துவிட்டேன். எனவே என் மீது போலியான வழக்கு பதிவு செய்யப்பட்டு நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். என் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. நான்கு நாட்கள் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் என்னிடமிருந்து எதையும் பெறவில்லை.
சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் இந்த விவகாரம் தொடர்பாக சிவகுமாரை நான் அம்பலப்படுத்துவேன். கர்நாடகாவில் விரைவில் காங்கிரஸ் அரசு கவிழும்.
செக்ஸ் வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை வெளியே கொண்டு வந்தது குமாரசாமிதான் என்று என்னிடம் சொல்லப்பட்டது. சிவகுமார்தான் அதனை பெற்றார். பிரஜ்வல் ரேவண்ணாவிடம் டிரைவராக பணிபுரிந்த கார்த்திக் கவுடாவிடமிருந்து பென் டிரைவ் பெறப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார். தேவராஜின் குற்றச்சாட்டுக்கள் பெங்களூரில் புதிய சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications