கர்நாடகா காங்கிரஸ் அரசை கவிழ்க்க 5 பன்றிகள், 42 ஆடுகள், 3 மாடுகளை பலியிட்டு சூனியம் வைத்ததா பாஜக?
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் கேரளாவில் பில்லி சூனிய பூஜை நடத்தி இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் துணை முதல்வருமான டிகே சிவகுமார் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு விரைவில் கவிழப் போகிறது என தொடர்ந்து பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். அண்மையில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கர்நாடகா வருகை தந்தார். அப்போதும் இதே கருத்தை ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தது பெரும் சர்ச்சையானது.

அதேநேரத்தில் கர்நாடகா காங்கிரஸில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தில் இருக்கிறது; நாங்கள் ஏன் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும்? கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் எனவும் கர்நாடகா பாஜக தலைவர்கள் பேசி வந்தனர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பில்லி சூனிய பூஜை செய்யப்பட்டிருப்பதாக துணை முதல்வர் டிகே சிவகுமார் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக டிகே சிவகுமார் கூறியிருப்பதாவது: முதல்வர் சித்தராமையா, நான் உள்ளிட்டோருக்கு எதிராகவும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் சிலர் சத்ரு பைரவி யாகம் நடத்துகின்றனர். இந்த யாகம் கேரளாவில் நடத்தப்பட்டிருக்கிறது.
கேரளாவின் ராஜராஜேஸ்வரி கோவிலில்தான் இந்த யாகம் நடத்தப்பட்டது. இதை யார் நடத்தியது, எதற்காக நடத்தினர்? யார் யார் இந்த யாகத்தில் பங்கேற்றனர்? என்பது எல்லாம் எனக்கும் தெரியும்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை ஒழித்துக் கட்டவே இந்த யாகம் நடத்தப்பட்டது. மொத்தம் 5 பன்றிகள், 21 வெள்ளாடுகள், 21 செம்மறி ஆடுகள், 5 எருமை மாடுகளைப் பலியிட்டு இந்த யாகம் நடத்தப்பட்டது. இதனை அகோரிகளே நடத்தி இருக்கின்றனர்.
பில்லி சூனியம், யாகம் நடத்துகிறவர்கள் நடத்தி சதி செய்யப்பட்டும். எங்களுக்கு கடவுளின் துணை இருக்கிறது. எங்களுக்கு கடவுளின் ஆசி இருக்கிறது. எனக்கு கடவுளின் பாதுகாப்பு இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பில்லி சூனியம் வைத்திருப்பதாக டிகே சிவகுமார் பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications