கர்நாடகாவில் தண்ணீர் பஞ்சத்தை போக்கி! ஐ.நா.சபைக்கே ஐடியா கொடுத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரி! யார் அவர்?
பெங்களூர்: கர்நாடகாவின் பெங்களூரில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது அந்த பகுதி மக்களின் தண்ணீர் கஷ்டத்தை போக்கியவர் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராம் பிரசாத் மனோகர் ஆவார்.
பெங்களூரில் கடந்த மார்ச் மாதம் கோடைக் காலம் தொடங்கும் முன்பே தண்ணீர் பிரச்சினை தொடங்கிவிட்டது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான பெங்களூரில் கிட்டத்தட்ட 1.40 கோடி பேர் வசிக்கிறார்கள்.

இத்தனை மக்களுக்கும் அன்றாட தண்ணீர் தேவையில் 1500 மில்லியன் லிட்டர் பற்றாக்குறை உள்ளது. மார்ச் முதல் மே மாதம் வரை மட்டும் சுமார் 8 ஆயிரம் மில்லியன் கனஅடி தேவை இருப்பதாக கர்நாடகா அரசு கூறியிருந்தது.
34 டிஎம்சி தண்ணீர் மட்டுமே நீர்த்தேக்கங்களில் இருந்தது. இந்த பெங்களூரில் சர்வதேச நிறுவனங்கள் உள்ளன. இங்கு பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பணியாற்றுகிறார்கள். இதனால் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கார்களை தண்ணீர் விட்டு கழுவக் கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
பலர் கழிப்பறைகளுக்கு செல்லக் கூட தண்ணீர் இல்லாத நிலையில் இருந்தனர். மேலும் பல்வேறு நிறுவனங்களும் தண்ணீர் பற்றாக்குறை தீரும் வரை ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று அங்கிருந்து வேலை செய்யுமாறும் அறிவுறுத்தல்கள் இருந்தன.
சுமார் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த தண்ணீர் பிரச்சினை உருவெடுத்தது. டேங்கர் லாரி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை வாங்க குடங்களுடன் மக்கள் அலைமோதிய காட்சிகள் எல்லாம் இருந்தன. இந்த நிலையில்தான் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராம் பிரசாத் மனோகர் பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவரிடம் 1.4 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் மிக பெரிய சவால் இருந்தது. பெங்களூரில் நீர் நிலைகள் ஏதும் இல்லாததால் காவிரி நீரை முறையாக விநியோகம் செய்வதில் ராம் பிரசாத் மனோகர் கவனம் செலுத்தினார். அது போல் சுத்திகரிக்கப்பட்ட நீரை, நீரே இல்லாமல் வறண்டு கிடந்த ஏரிகளில் நிரப்பிய போது அதன் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது என்றார்.
அது போல் பெங்களூர் தண்ணீர் பிரச்சினையை தீர்த்ததன் மூலம் இவர் உலகளவில் கவனம் பெற்றார். தண்ணீர் பிரச்சினையை போக்க அவருடைய 5 ஃபார்முலாக்களை ஐநா சபை கேட்டறிந்துள்ளது. இதை தண்ணீர் பிரச்சினை உள்ள நாடுகளில் பயன்படுத்த போகிறார்களாம்.












Click it and Unblock the Notifications