மாமியாரை கொலை செய்யனும்.. 2 மருந்து பெயர் சொல்லுங்க டாக்டர்.. பெங்களூர் மருத்துவருக்கு வந்த மெசேஜ்!
பெங்களூர்: பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவரிடம் வாட்ஸ் ஆப் வாயிலாக பேசி, தனது மாமியாரை கொலை செய்வதற்கு 2 மருந்துகளை பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் சுனில் குமார். இவர் மருத்துவம் தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல் மக்களுக்கு சந்தேகம் இருந்தால் அவர்கள் தொடர்பு கொள்ள தனது செல்ஃபோன் நம்பரை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்து பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவரை தொடர்பு கொண்டுள்ளார்.

அந்தப் பெண் தனது பெயர் சஹானா என்றும், பெங்களூரில் வசிப்பதாகவும் கூறி இருக்கிறார். சஹானா கன்னடத்தில் பேசியதால், மருத்துவர் தரப்பில் கன்னடத்திலேயே பதில் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் சுனில் குமார், மருத்துவம் தொடர்பான சந்தேகம் கேட்க போகிறார் என்ற எதிர்பார்ப்பில் சஹானாவின் உடல்நிலை குறித்து விசாரித்திருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த சஹானா பின்னர், நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். ஆனால் கேட்ட பின் என்னிடம் கோபப்படக் கூடாது என்றும் சூசகமாக கூறியுள்ளார். இதனால் உடல்நிலை தொடர்பான சந்தேகம் கேட்பார் என்று எதிர்பார்த்து மருத்துவர் சுனில் குமார், நீங்கள் என்னிடம் எதையும் மறைக்க தேவையில்லை. உங்களுக்கு என்ன கேட்க வேண்டுமோ கேளுங்கள் என்று பதில் அளித்திருக்கிறார்.
அப்போது சஹானா தரப்பில் எனது மாமியாரை கொலை செய்வதற்கு 2 மருந்துகளின் பெயரை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ந்துபோன மருத்துவர், உயிரை காப்பாற்றுவதுதான் மருத்துவர்களின் வேலை.. கொல்வது அல்ல.. சோஷியல் மீடியாவில் இருந்து என் செல்ஃபோன் நம்பரை எடுத்து இப்படி கேள்வி கேட்பதும் தவறு என்று சுட்டிக் காட்டி இருக்கிறார்.
ஆனாலும் அந்தப் பெண் 2 மருந்துகளை மட்டும் பரிந்துரைக்குமாறு கெஞ்சி இருக்கிறார். ஒரு கட்டத்தில் மருத்துவரின் செல்ஃபோனுக்கு மெசேஜ் வந்து கொண்டே இருக்க, உடனடியாக சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் மருத்துவர் சுனில் குமார் புகாரளித்துள்ளார். இதனிடையே மருத்துவருக்கு செல்ஃபோனில் அழைத்து, இந்த விஷயம் தொடர்பாக யாரிடமும் புகார் அளித்துவிடாதீர்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அதோடு மன்னிப்பு கேட்ட அந்தப் பெண், மருத்துவர் எதற்காக மாமியாரை கொலை செய்ய நினைக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண், என் மாமியார் என்னை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார். அந்த சித்ரவதையை தாங்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார். இந்த சம்பவம் பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் சுனில் குமார் விஜயபுரா தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர். பொது வாழ்க்கையில் இருப்பதால், அவரை சிக்க வைப்பதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என்றும் பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்தப் பெண்ணின் மொபைல் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications