காவிரி ஆற்றில் மிதந்த உடல்! பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி சுப்பண்ண அய்யப்பன் மர்மமான முறையில் மரணம்
பெங்களூர்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநர் ஜெனரலும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் சுப்பண்ண அய்யப்பன் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளார். காவிரி ஆற்றில் அவரது உடல் மிதந்து வந்த நிலையில், அங்குச் சென்ற சிலர் அளித்த தகவலின் பெயரில் அதை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகாவின் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள சாய் ஆசிரமத்திற்கு அருகிலுள்ள காவிரி ஆற்றில் உடல் ஒன்று மிதந்து வந்துள்ளது. அங்கிருந்த சிலர் அதைப் பார்த்துக் கடந்த மே 10ம் தேதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த உடலை மீட்டுள்ளனர். அப்போது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தான் உயிரிழந்தவர் விஞ்ஞானி ஐயப்பன் என்பது தெரிய வந்தது.

டாக்டர் அய்யப்பன்
மைசூருவில் தனது மனைவியுடன் வசித்து வந்த டாக்டர் அய்யப்பன், மே 7ஆம் தேதி காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் அவரது உடல் சனிக்கிழமை கண்டறியப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை தான் சடலமாகக் கண்டறியப்பட்டது ஐயப்பன் என்பது உறுதியானது. அவரது ஸ்கூட்டரும் ஆற்றங்கரையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது மர்மத்தை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கிறது.
இது தொடர்பாக ஸ்ரீரங்கப்பட்டணா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐயப்பன் மரணம் விபத்தா இல்லை அதில் எதாவது சதி இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீல புரட்சி
இந்தியாவின் வேளாண் துறையைப் புரட்டிப்போட்டு, நமது நாட்டில் உணவுப் பஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த 'நீலப் புரட்சி' செய்து காட்டிய ஆய்வாளர்களில் முக்கியமானவர் டாக்டர் அய்யப்பன். இவர் மீன் வளர்ப்பதற்கும் புதிய மற்றும் சிறந்த வழிகளை உருவாக்கினார். இது இந்தியா முழுவதும் மீன் வளர்க்கும் மற்றும் பிடிக்கும் முறையை மாற்றியது.
அவர் செய்த பல்வேறு விஷயங்கள் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த உதவியது. உணவு முறைகளை மேம்படுத்தியது.. நமது நாட்டில் உணவு உற்பத்தித்திறனும் அதிகரித்தது. நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 2022இல் அவருக்குப் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
யார் இவர்?
கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தின் எலந்தூரில் 1955ல் டிசம்பர் 10ம் தேதி பிறந்தவர் அய்யப்பன்.. 1975இல் மீன்வளம் சார்ந்த படிப்பில் இளங்கலை (BFSc) பட்டம் படித்த அவர், 1977இல் மங்களூரில் மீன்வள பிரிவில் முதுகலைப் பட்டம் படித்தார். தொடர்ந்து 1998இல் அவர் பெங்களூர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
பல முக்கிய பணிகள்
மீன் வளர்ப்பு மற்றும் நிலையான விவசாயத்தை மேம்படுத்த டாக்டர் அய்யப்பன் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். புவனேஸ்வரில் உள்ள மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (CIFA) மற்றும் மும்பையில் உள்ள மத்திய மீன்வளக் கல்வி நிறுவனம் (CIFE) ஆகியவற்றின் இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார் மேலும், ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் (NFDB) தலைமை நிர்வாகியாகவும் இருந்தார். பின்னர் மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையில் (DARE) செயலாளராகவும் பணியாற்றினார்.
ஓய்வு பெற்ற பிறகும் அவர் தனது பணிகளை விடவில்லை.. கடந்த சில ஆண்டுகளாக அவர் NABL என்ற வாரியத்தின் தலைவராக இருந்தார். மேலும், இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் (CAU) துணைவேந்தராகவும் பணியாற்றினார்.












Click it and Unblock the Notifications