ஓசூருக்கும் பெங்களூருக்கும் இடையே.. சூப்பராக இருக்குமே மாநில நுழைவாயில்.. ஆனா இப்போ இப்படி ஆகிடுச்சே
பெங்களூர்: ஓசூர் - பெங்களூர் இடையே உள்ள தமிழக கர்நாடகா மாநில எல்லையை பிரிக்கும் நுழைவாயில் இப்படி ஆகிவிட்டதே என்று அதிர்ந்து போய் உள்ளனர் அந்த வழியாக பயணிக்கும் மக்கள்.
தமிழகம்- கர்நாடக எல்லைப்பகுதியில் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். இருமார்க்கமாகவும் வாகனங்கள் வரிசை கட்டி சென்றபடி இருக்கும்.
இதில் காலை மற்றும் மாலை வேளைகளில் சொல்லவே வேண்டாம் என்கிற அளவுக்கு வாகன போக்குவரத்து அதிக அளவில் காணப்படும்.

நுழைவு வாயில்
குறிப்பாக ஓசூரில் இருந்து அத்திப்பள்ளி வரை வாகனப் போக்குவரத்து அதிக அளவில் காணபப்டும். இந்த சாலையில், தமிழகத்தின் மாநில எல்லையான ஜூஜூவாடியை கடந்து கர்நாடக மாநிலம் ஓசூர் - பெங்களூர் செல்லும் நுழைவுப்பகுதியில் நுழைவு வாயில் ஒன்று இருக்கும். அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை கவரும் வகையில் பிரம்மாண்டமாக இந்த நுழைவு வாயில் இருக்கும். சாலையின் இருபுறம் செல்லும் வாகன ஓட்டிகளும் பார்க்கும் வகையில் இந்த நுழைவு வாயில் அமைந்து இருக்கும்.

என்னப்பா இது இப்படி இருக்கிறது
கர்நாடக மாநிலத்திற்குள் செல்லும் பயணிகளை வரவேற்கும் வகையில் இந்த நுழைவு வாயில் தெரியும். இந்த நிலையில், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த நுழைவு வாயில் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை நேற்று இரவு சேதமடைந்து காணப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் எல்லாம் அடடே.. என்னப்பா இது இப்படி இருக்கிறது என்றும்.. எப்படி இப்படி ஆனது என்றும் வியந்தபடி பார்த்த வண்ணம் சென்றனர்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து
அந்த வழியாக எம்சாண்ட் ஏற்றிச்சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரி மோதியதால் தான் நுழைவு வாயில் சேதம் அடைந்திருப்பதற்கு காரணம் என தெரியவந்தது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பெங்களூரு நோக்கி நேற்று மாலை எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி சென்றுகொண்டிருந்தது. சரியாக தமிழக கர்நாடக எல்லைப்பக்குதியான அந்த நுழைவு வாயில் அருகே வந்த போது திடீரென அந்த டிப்பர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

நுழைவு வாயில் சேதம்
இதனால் தறிகெட்டு ஓடிய டிப்பர் லாரி அந்த நுழைவு வாயிலின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. மோதிய வேகத்தில் அந்த நுழைவு வாயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதேபோல் லாரியும் தலைகுப்புற கவிழ்ந்தது. கர்நாடக மாநிலத்தின் நினைவு சின்னமாக விளங்கிய நுழைவு வாயில் சேதம் அடைந்ததால், அதிருப்தி அடைந்த கன்னட அமைப்புகள் அப்பகுதியில் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விரைவில் சீர் செய்யப்படும்
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சேதம் அடைந்த நுழைவு வாயில் பகுதி விரைவில் சீர் செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சமாதானம் அடைந்த கன்னட அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ச்சியுடன் பார்த்து சென்ற வாகன ஓட்டிகள்
விபத்தில் சிக்கிய லாரி கர்நாடக மாநில பதிவு எண் கொண்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓசூர்- பெங்களூரு இடையே உள்ள தமிழக கர்நாடக மாநில எல்லையை பிரிக்கும் மாநில எல்லையை பிரிக்கும் நுழைவு வாயில் இப்படி ஆகிவிட்டதே என்று அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்வதையும் காண முடிந்தது.












Click it and Unblock the Notifications