இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனுக்கு இலங்கையில் மாரடைப்பு- பெங்களூர் அழைத்து வரப்பட்டு சிகிச்சை!
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓபி ரவீந்திரநாத் வெற்றிபெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் பன்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் குமார் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளதாகவும், வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதாக கூறி தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியில் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ரவீந்திரநாத் குமார் இந்த வழக்கை ஏற்கக்கூடாது எனவழக்கு தொடர்ந்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் 3 நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் குமார், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சி அளித்தார்.
அவரை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சி அளித்தனர். அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கு தொடர்பாக நீதிபதி சில விளக்கங்களை கேட்டிருந்தார். ஆவணங்களை சமர்பிக்க தயாராக உள்ளதாக தெரிவித்த ரவீந்திரநாத் குமார் தரப்பு, தன்னுடைய விளக்கத்தை கேட்க வேண்டுமென கோரிக்கை வைத்தது.
நீதிபதி அதற்கு ஒப்புதல் தெரிவித்த நிலையில், ரவீந்திரநாத் குமார் கடந்த வாரம் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீராம், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மனுதாரர் மிலானி தரப்பு வழக்கறிஞர் அருணின் குறுக்கு விசாரணைக்கும் பதிலளித்தார்.
இந்த வழக்கில் கடந்த 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ரவீந்திரநாத் வேட்புமனு சொத்துகள் விபரம், வங்கி கடன், வைப்பு தொகை மூலமாக பெற்ற வட்டி விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது செல்லாது போன்ற காரணங்களால் ரவீந்திரநாத்தின் வெற்றியை செல்லாது என அறிவித்து தீர்ப்பு வழங்கினார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை வைக்கப்ட்டது. இதனை ஏற்ற நீதிபதி தீர்ப்பை 30 நாட்கள் நிறுத்திவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று சென்னையில் ஓ பன்னீர்செல்வத்துடன் செய்தியாளர்களை சந்தித்த பன்ருட்டி ராமச்சந்திரன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாத என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
வேட்புமனுவில் சொத்து விபரங்களை தாக்கல் செய்யும்போது அச்சுப்பிழை ஏற்பட்டதாகவும், சொத்து விபரங்களை மாற்றி சொல்லவில்லை எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications