சூப்பர்! தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு 75 யூனிட் வரை இலவச மின்சாரம்! கர்நாடக முதல்வர் அறிவிப்பு
பெங்களூர்: ‛‛கிராமப்புற ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு 75 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும்'' என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை செயல்பட்டு வருகிறார். மறைந்த முன்னாள் துணை பிரதமர் பாபுஜெகஜீவன்ராம் பிறந்த நாளையொட்டி அவரது பெயரில் விருது வழங்கும் விழா பெங்களூருவில் நடந்தது.
இந்த விழாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்று விருதுகள் வழங்கினார். அதன்பின் அவர் பேசியதாவது:

வீடு கட்டும் மானியம் உயர்வு
கர்நாடகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒருவருக்கு வீட்டு மானியமாக ரூ.1.75 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். சுயதொழில் செய்யும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு உதவி செய்ய வசதியாக ஒவ்வொரு தாலுகாவிலும் பாபுஜெகஜீவன்ராம் சுயதொழில் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் ஒரு மாதத்தில் அமலுக்கு கொண்டு வரப்படும். புதிதாக தொழில் தொடங்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இலவச மின்சாரம்
குடீர திட்டத்தின் கீழ் கிராமப்புற ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு 75 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும். அரசு விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ.20 லட்சமாக உயர்வு
பாபுஜெகஜீவன்ராம் என்பவர் விஸ்வாசம், நேர்மையின் சின்னமாக விளங்கினார். கிராமப்புறங்களில் நில உரிமை உள்ளவர்களுக்கு சமூக மரியாதை கிடைக்கிறது. ஆதிதிராவிடர், பழங்குடியின சமுதாயத்தினரின் நலனுக்காக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமல்படுத்தப்படும் நில உரிமை திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இதுவரை ரூ.15 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த மானியத்தை ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு வளர்ச்சி பெறும்
இதன்மூலம் அந்த சமூகத்தினருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் கல்வி, வேலை, சமூக மரியாதை கிடைத்தால் மட்டுமே அனைவரும் முன்னுக்கு வர முடியும். அப்போது தான் நாடு முழுமையான வளர்ச்சி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications