இப்படி கூட நடக்குமா! ஜெர்மனியில் வேலை செய்த ஐடி ஊழியர்.. பெங்களூர் தெருவில் பிச்சை எடுக்கும் அவலம்!
பெங்களூர்: விதி ஒருவரது வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடும் என்பது யாருக்கும் தெரியாது. உச்சத்தில் இருக்கும் நபர் கூட சில காலத்தில் சறுக்கி கீழே வந்துவிடுவார். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இங்கே பெங்களூரைச் சுற்றி வரும் இளைஞருக்கு நடந்துள்ளது. ஒரு காலத்தில் ஜெர்மனியில் வேலை செய்து வந்த அந்த நபர் இப்போது பெங்களூரில் பிச்சை எடுத்து வருகிறார்.
பெங்களூரின் ஜெயநகர் பகுதியில் இந்த நபர் சுற்றி வந்துள்ளார். சிவப்பு டி-சர்ட் அணிந்திருந்த அந்த நபரின் நிலை பார்க்கவே மோசமாக இருந்தது. அவருக்கு ஷரத் யுவராஜ் என்பவர் உதவியுள்ளார். மேலும், அவரைப் பற்றியும் விசாரித்துள்ளார்.

அப்போது அவர் சொன்ன தகவல்கள் மிரள வைப்பதாக இருக்கிறது. இதை வீடியோவாக பதிவு செய்த ஷரத் யுவராஜ், அதை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
ஐடி ஊழியர்: சிவப்பு டி சர்ட் அணிந்திருந்த அந்த நபர் ஐடி துறையில் வேலை செய்ததாகக் கூறுகிறார். அதிலும் ஜெர்மனி நாட்டில் எல்லாம் வேலை செய்ததாகக் கூறுகிறார். சில காலம் அங்கு ஜெர்மனியில் வேலை செய்த அந்த நபர், பின்னர் பெங்களூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். மேலும், ஒரு பெண்ணை காதலித்தும் வந்து இருக்கிறார். அப்போது தான் அந்த மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது.
வேலை, காதல் என எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டு இருந்தநிலையில், திடீரென அவர் தனது பெற்றோர் மற்றும் காதலியை இழந்துள்ளார். அவர்களுக்கு என்ன ஆனது.. அப்போது என்ன நடந்தது என்பதை அவர் சரியாகச் சொல்லவில்லை. ஆனால், ஒரே நேரத்தில் பாசம் வைத்திருந்த அனைவரும் இல்லாமல் போனதால் அது அவரை மன ரீதியாக ரொம்பவே பாதித்துள்ளது.
மது: இதில் இருந்து மீள மது குடிக்கத் தொடங்கியிருக்கிறார். மதுப் பழக்கம் என்பது மதுவுக்கு அடிமையாகும் நிலையாக மாறியது. ஒரு கட்டத்தில் மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழலுக்குத் தள்ளப்பட்ட அவர், சொத்துகளை எல்லாம் விற்று மது குடிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் வீடற்ற நபராக மாறிய அவர், இப்போது பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறாராம்.
என்ன படித்துள்ளீர்கள் என்று யுவராஜ் கேட்ட கேள்விக்கு, "நான் ஒரு பொறியாளர். நான் குளோபல் வில்லேஜில் உள்ள மைண்ட்ட்ரீயில் பணிபுரிந்தேன். எனது பெற்றோரை இழந்தபோது நான் மது குடிக்கத் தொடங்கினேன்" என்கிறார். இது தொடர்பாக மூன்று வீடியோக்களை யுவராஜ் பகிர்ந்துள்ள நிலையில், அதில் தியானம், தத்துவம் மற்றும் அறிவியல் குறித்தெல்லாம் யுவராஜ் மிகவும் அறிவார்ந்து பேசுகிறார். மேலும், ஐன்ஸ்டீன் மற்றும் டேவிட் ஹியூம் குறித்தும் கூட பேசுகிறார்.
சாதி, மதம்: மேலும், கடைசி வீடியோவில், தனது வாழ்க்கையின் நிலை குறித்து யோசித்து அந்த நபர், "மதம், சாதி, இவையெல்லாம் சேர்ந்து என்ன எப்படி ஆக்கிவிட்டது எனப் பாருங்கள்.. நான் இன்னும் படித்திருக்க வேண்டும்" என்று கூறுகிறார். அந்த நபர் தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அவரது கதையைக் கேட்டு வேதனை அடைந்த யுவராஜ் அவருக்கு உதவ முயன்றுள்ளார். இருப்பினும், எந்தவொரு உதவியையும் வாங்க அவர் மறுத்துவிட்டாராம். என்ஜிஓ மூலம் உதவலாம் என்று அந்த பகுதியில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றையும் தொடர்பு கொண்டு இருக்கிறார். இருப்பினும், போலீஸ் உதவியில்லாமல் உதவ முடியாது என்று என்ஜிஓ தரப்பினர் கூறிவிட்டதாக யுவராஜ் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications