பெங்களூர் அருகே மணமகள் சொன்ன வார்த்தை.. தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன்
பெங்களூர்: பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பால்புரா கிராமத்தை சேர்ந்தவர் வேணு என்ற இளைஞருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஏப்ரல் 30ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருமண மண்டபத்தில் உறவினர்கள் ஆசிர்வாதம் செய்ய காத்திருந்தனர். அப்போது மணப்பெண் வேறு வாலிபரை காதலித்ததாக கூறி தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திவிட்டு மண்டபத்தில் இருந்து மணமகன் வேணு வெளியேறினார்.
பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹள்ளி பகுதியில் பால்புரா என்ற கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தில் வேணு என்பவர் வசித்து வருகிறார். வேணுவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஏப்ரல் 30-ந் தேதியான நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் வேணு மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் மேடையில் அமர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.

நள்ளிரவு வரவேற்பு முடிந்ததும் மணமகனும், மணமகளும் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர். நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மண்டபத்தில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் குவிந்து இருந்தனர். புரோகிதர் மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார். மேள, தாளங்கள் முழங்கி கொண்டிருந்தது. முகூர்த்த நேரம் நெருங்கியது. மணமகள் கழுத்தில் தாலி கட்டும்படி புரோகிதர் மணமகனிடம் கூறினார்.
அப்போது திடீரென்று மணமேடையில் தாலி கட்ட மறுத்துவிட்டு எழுந்த மணமகன் வேணு, மணப்பெண் ஏற்கனவே வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். திருமணத்துக்கு முன்பே இதை என்னிடம் கூறியிருந்தார். வேறொருவரை காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள என் மனம் ஏற்க மறுக்கிறது.. எனவே தாலி கட்ட என்னால் முடியாது இது வாழ்க்கைக்கு ஒத்து வராது. அப்படியே கட்டாயத்தில் திருமணம் செய்து கொண்டாலும் மன நிம்மதியுடன் வாழ முடியாது என்று கூறி திருமணத்தை நிறுத்தினார். மேலும் அவர் மண்டபத்தில் இருந்து வெளியேறி விட்டார்.
கன நிமிடத்தில் நடந்த இந்த செயலை பார்த்து ஆடிப்போன மணப்பெண், அவரது குடும்பத்தினர், திருமணத்திற்கு வந்த அனைவரும் உறைந்து போனார்கள். அதேநேரம் மணமகன் வேணு மீது குற்றம் சாட்டிய பெண் வீட்டார் உடனே தேவனஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மணமகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தாலிக்கட்டும் நேரத்தில் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெங்களூர் புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications