வாட்டிய தனிமை.. மாப்பிள்ளைக்கு 85 வயசு.. பொண்ணுக்கு 65 வயசு.. குடும்பமே வாழ்த்திய வைபவம்..!
85 வயது தாத்தா, 65 வயது பாட்டியை திருமணம் செய்துள்ளார்
பெங்களூரு: 65 வயது பாட்டியை, 85 வயது தாத்தா கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.. அதுவும் காதலித்து கல்யாணம் செய்துள்ளார்.. இந்த கல்யாணம் தாத்தாவின் 9 பிள்ளைகள், மருமகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் முன்னிலையிலேயே நடந்துள்ளது..!
மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா.. இவர்தான் அந்த 85 வயது மாப்பிள்ளை.. சொந்தமாக மட்டன் கடை வைத்திருக்கிறார்.
மனைவி பெயர் குர்ஷித் பேகம்... இந்த தம்பதிக்கு 9 பிள்ளைகள் இருக்கிறார்கள்.. எல்லாருக்குமே திருமணமாகி விட்டது... எல்லாருமே தனித்தனியாக குடும்பம் நடத்தி வருகிறார்கள்..!
விஷமான உணவு...சென்னை-பெங்களூரு சாலையில் பல மணி நேரம் நடந்த போராட்டம் வாபஸ்
தாத்தா
பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி சென்றுவிட்டதால், முஸ்தபாவும், மனைவி குர்ஷித் பேகமும் மட்டும் தனியாக வசித்து வந்திருக்கிறார்கள்.. இந்நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குர்ஷித் பேகத்துக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. தீவிர சிகிச்சை தந்தும் பலனளிக்காமல் குர்ஷித் பேகம் இறந்துவிட்டார்.. இதனால் முஸ்தபா மட்டும் தனிமரமானார்.. அந்த வீட்டிற்குள்ளேயே தனியாகவே வசித்து வந்தாலும், தனிமை அவரை வாட்டியது.. வயோதிகமும் சேர்ந்துவிட்டது..
பாட்டி
இதனால், தனக்கு ஒரு துணை தேவை என்று முஸ்தபா உணர்ந்தார்... இதையடுத்து அதே பகுதியில் வசித்து வந்த பாத்திமா பேகம் என்ற பாட்டியை சந்தித்தார்.. பாத்திமாவுக்கு 65 வயதாகிறது.. அவரும் தனிமையில்தான் வசித்து வருகிறார்.. வயதான காலத்தில் துணைகளை இழந்த இருவரும், நன்றாக பழகி வந்துள்ளனர்.. ஒருநாள், தன்னுடைய விருப்பத்தை, தாத்தா பாட்டியிடம் சொல்லி உள்ளார்..
திருமணம்
"எனக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கிறது.. நமக்கு இப்போதுதான் ஒரு துணை தேவை.. நமக்குள் நல்ல புரிதலும் உள்ளது.. நாம 2 பேரும் கல்யாணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாமா?" என்று பாத்திமா பேகமிடம், முஸ்தபா மனம்விட்டு கேட்டார்.. முஸ்தபாவின் இந்த விருப்பத்துக்கு சம்மதம் சொன்னார் பாத்திமா.. இதை கேள்விப்பட்டு, அனைவரும் கிண்டல், கேலி செய்ய ஆரம்பித்தனர்.. "இந்த வயசில் இதெல்லாம் தேவையா?" என்று அவர்களிடமே கேட்டனர்..
பிள்ளைகள்
ஆனாலும் காதல் ஜோடி இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்... மேலும் இந்த திருமணத்துக்கு தங்கள் பிள்ளைகளின் சம்மதம் தான் முக்கியம் என்று உணர்ந்த நிலையில், முஸ்தா தன்னுடைய வீட்டில் மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் என அனைவரிடமும் தன் விருப்பத்தை தெரிவித்தார்.. அவர்கள் அனைவருமே தாத்தாவின் விருப்பத்திற்கு ஓகே சொன்னார்கள்.. இதையடுத்து, இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்ட மகன்கள், மருமகள்கள், மருமகன்கள், பேரப்பிள்ளைகள், முன்னிலையில்தான் இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று முஸ்தபா விரும்பினார்..
மணவாழ்க்கை
அதன்படியே அனைத்து குடும்ப உறுப்பினர்களும் முன்னின்று முஸ்தபாவுக்கும், பாத்திமா பேகத்திற்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர்... கர்நாடகாவில் இப்போது தொற்று அதிகம் என்பதால், இந்த திருமணத்தை பெரிய அளவில் நடத்தவில்லை.. வீட்டிற்குள்ளேயே சிம்பிளாக முடித்து கொண்டனர்.. பின்னர், புதுமண தம்பதியிடம், மொத்த குடும்பத்தினரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டனர்.. இப்போது மணமக்கள் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை துவங்கி உள்ளனர்...!