சித்தராமையா, குமாரசாமி உட்பட 61 பேருக்கு கொலை மிரட்டல்.. கடிதம் அனுப்பிய இந்துத்துவா அமைப்பு
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி மற்றும் எழுத்தாளர்கள் என மொத்தம் 61 பேருக்கு இந்துத்துவா அமைப்பு ஒன்றின் பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். தொடர்ச்சியாக மாநிலத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்து வருகின்றன.
ஹிஜாப் தடை, கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி மறுப்பு, ஹலால் இறைச்சி பிரச்சனை, முஸ்லிம் வியாபாரிகளிடம் இந்துக்கள் பொருட்கள் வாங்க வேண்டாம் என்பன போன்ற பிரச்சனைகள் அடுத்தடுத்து எழுந்துள்ளன. மேலும், மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் சில அமைப்புகள் பிரசாரங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்.. கலவரம் செய்தால் நடவடிக்கை.. கர்நாடக முதல்வர் பசவராஜ் எச்சரிக்கை.!
61 பேருக்கு கொலை மிரட்டல்
இந்நிலையில் தான் கர்நாடக மாநில எழுத்தாளர் வீரபத்ரப்பாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு கடிதம் ஒன்று வந்துள்ளது. மிரட்டல் கடிதம் 2 பக்கங்களை கொண்டுள்ளது. இதில் எழுத்தாளர்கள் உள்பட 61 பேரின் இடம்பெற்றுள்ளன. முன்னாள் முதல்வர்களான சித்தராமையா, குமாரசாமி ஆகியோரின் பெயர்களுக்கு கடிதத்தில் உள்ளது. இதன் மூலம் அவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதில் சித்தராமையாக காங்கிரஸ் கட்சி சார்பில் கர்நாடகத்தில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். குமாரசாமி, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடிதத்தில் இருந்தது என்ன
இந்த மிரட்டல் கடிதமானது "சாஹிஷ்ணு இந்து" என் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. அனுப்பிய நபரின் பெயர், விலாசம் உள்பட எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. 2 பக்கங்கள் கொண்ட இந்த கடிதம் முழுவதும் கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதில் இந்தியாவுக்கு எதிரான அறிவுஜீவிகளே கவனமாக இருங்கள். வீரபத்ரப்பா, முன்னாள் முதல்வர்களாக சித்தராமையா, குமாரசாமியே கவனமாக இருங்கள். உங்கள் வீட்டில் வைத்து உங்களுக்கான இறுதி சடங்கு நடத்துவதற்கு தயாராக இருங்கள் என 61 பேருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் கூறுவது என்ன
இதுகுறித்து மிரட்டலுக்கு உள்ளான எழுத்தாளர் வீரபத்ரப்பா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் இருந்து பெயர், முகவரி இல்லாத கோழையிடமிருந்து எனக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் இரண்டு முன்னாள் முதல்வர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது ஹிஜாபை ஆதரித்தும், பகவத் கீதைக்கு எதிராகவும் மாநில அரசுக்கு கடிதம் எழுதியதற்காக ‛சாஹிஷ்ணு இந்து 61க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை வேண்டும்
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிய வேண்டும். மேலும் கடிதம் அனுப்பியவரை கண்டுபிடித்து அவரது நோக்கம் ஆகியவற்றை அறிய விரிவான விசாரணை நடத்த வேண்டும். மத நல்லிணக்கத்திற்காகவும், அமைதிக்காகவும் எழுத்தாளர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களைக் கொல்ல அச்சுறுத்தும் தீய சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என கூறினார்.
பரபரப்பு
கொலை மிரட்டல் குறித்து புகார் கூறியுள்ளீர்களா என்ற கேள்விக்கு, அவர், ‛‛மாநில உள்துறை அமைச்சரே பொய்யான விஷயங்களை கூறி வகுப்புவாத பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இந்த சூழலில் புகார் கொடுப்பதன் மூலம் எந்த வகையான நம்பகத்தன்மை கிடைக்க போகிறது'' என்றார். முன்னாள் முதல்வர்கள் உள்பட 61 பேருக்கு கர்நாடகத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.