கன்னடம் பேசிய பெண் மீது தாக்குதல்.. ‛மலையாளி’ அடித்ததாக கண்ணீரோடு கதறி வீடியோ.. பரபர பெங்களூர்
பெங்களூர்: பெங்களூர் பிடிஎம் லேஅவுட்டில் உள்ள பிஜியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கண்ணீரோடு, ‛‛கன்னடம் பேசியதால் மலையாளி பெண் என் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கி உள்ளார்'' என வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் நிலையில் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.
அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் ஐடி உள்பட ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இதனால் கர்நாடக மக்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் வடமாநில மக்களும் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.
ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும் கூலி வேலை முதல் பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். பலபேர் குடும்பத்துடன் வீடுகள் எடுத்து தங்கியுள்ள நிலையில் இளைஞர்கள், இளம்பெண்கள் விடுதிகள், பிஜிகளில் அறை எடுத்து தங்கி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பெண்
பெங்களூர் பிடிஎம் லேஅவுட்டில் உள்ள தனியார் பிஜியில் ஏராளமான பெண்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஒரு பெண் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் கண்ணீருடன் கதறியபடி அந்த பெண் பேசுகிறார். அதில், ‛‛என் பெயர் டாக்டர் சிருஷ்டி. நான் கன்னடத்தில் பேசியதால் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. என் தலைமுடியை பிடித்து இழுத்து மலையாளி பெண் என்னை தாக்கினார்'' என கூறியுள்ளார்.

நடந்தது என்ன?
கண்ணீரோடு இந்த பெண் பேசும் வீடியோவின் பிற்பகுதியில் இருவருக்கும் நடந்த சண்டை தொடர்பான காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட பெண், எதிராளியை பார்த்து ‛‛கன்னட மக்கம் சீப்பானவர்களா?. நீ சொந்த ஊரில் உணவு கிடைக்காமல், சம்பாதிக்க வழியின்றி, பிழைப்பு தேடி இங்கு வந்திருக்கிறாய். இங்கு பணம் சம்பாதித்து கர்நாடகாவின் உணவை சாப்பிடுகிறாய்'' என கூறுகிறார். அதற்கு அந்த பெண், ‛‛நான் உணவுக்கு வழியின்றி நான் இங்கு வரவில்லை. எனக்கு திறமை இருப்பதால் இங்கு வந்து பணி செய்து சம்பாதிக்கிறேன். உங்களுக்கு திறமை இல்லை. உங்களுக்கு திறமை இருந்தால் நான் எதற்கு இங்கு வரப்போகிறேன்?'' எனக்கூறி வீடியோ பதிவு செய்த செல்போனை பிடுங்குகிறார். சண்டைக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் அந்த வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வலைதளத்தில் வேகமெடுத்த வீடியோ
இந்நிலையில் சம்பவம் தொடர்பான இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு கர்நாடகாவை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய 2 பேருக்கும் இடையே எதற்காக சண்டை வந்தது என்பது பற்றிய எந்த விபரமும் வெளியாகாத நிலையில் வீடியோ மட்டும் இணையதளத்தில் பரவி வருகிறது.

போலீஸ் வழக்குப்பதிவு
இதற்கிடையே சம்பவம் குறித்து பெங்களூர் மைகோ லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் தான் நடந்த சம்பவம் குறித்த முழுவிபரம் வெளியே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பெங்களூர் சிட்டி போலீசார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛சம்பவம் குறித்து மைகோ லே-அவுட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications