நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்! தமிழக மாணவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்கும் ராம்பிரசாத் மனோகர் IAS
பெங்களூர்: ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்று அனைத்து மாணவர்களுக்கும் ஆசை இருக்கும். ஆனால் சரியான வழிகாட்டி இருந்தால் மட்டுமே கனவை நிஜமாக்க முடியும். இந்த வழிகாட்டும் பணியை மாணவர்களுக்கு இலவசமாக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கர்நாடகாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, ராம் பிரசாத் மனோகர் செய்து வருகிறார்.
கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் 'ஐஏஎஸ் ஆக ஆசைப்படு' என்கிற நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் இலவசமாக மாணவர்களுக்கு ஐஏஎஸ் ஆவதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கர்நாடகாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியும், பெங்களூர் குடிநீர் கழிவு அகற்ற வாரியத்தின் தலைவருமான ராம்பிரசாத் மனோகர், மாணவர்களுக்கு இலவசமாக வழிகாட்டுதலை வழங்கி வருகிறார்.

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ராம்பிரசாத் மனோகர், சாமானிய குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர். கல்விதான் வறுமையை ஒழிக்கும் என்பதை முழுமையாக நம்பிய இவர், விடா முயற்சியால் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று இன்று மக்களுக்காக பணியாற்றி வருகிறார்.
இவர் தமிழ்நாட்டில் அரசு/தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஐஏஎஸ் வழிகாட்டுதல் கொடுக்க முன்வந்திருக்கிறார். இலவசமாக பள்ளிகளில் 11ம் வகுப்பு மேல் பயிலும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, ஆலோசனைகளை பெறலாம்.
முன்னதாக, 'ஐஏஎஸ் ஆக ஆசைப்படு' வழிகாட்டு நிகழ்ச்சியின் முதல் கூட்டம் பெங்களூர் குயின்ஸ் சாலையில் உள்ள அக்ரிகல்ச்சுரல்ஸ் இன்ஸ்டிடியூஷனில் நடைபெற்றது. இதில் 25க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பங்கேற்று பலன் அடைந்தனர்.
மாணவர்களிடையே ராம் பிரசாத் மனோகர் பேசியதாவது, "ஐஏஎஸ் ஆக ஆசைப்படுபவரா நீங்கள்? அப்படியெனில் உங்கள் வாழ்வில் முதல் படியை எடுத்து வைத்துள்ளீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். முதலில் நீங்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். வாழ்க்கையில் கண்டிப்பாக ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தேன். கல்லூரி படிப்புக்காக முதல்முறையாக சென்னைக்கு சென்றேன். பெரிய கட்டிடங்கள், ஆங்கிலத்தில் பேசும் மக்கள் அனைவரையும் கண்டேன். அது புதுவித அனுபவமாக இருந்தது.

அப்போதுதான் நாம் ஏன் ஐஏஎஸ் ஆக கூடாது? என்று யோசித்தேன். நான் யோசித்ததை வெற்றிகரமாக செய்து முடித்தேன். மூன்று முறை தேர்வு எழுதி தோல்வியுற்றேன் நான்காம் முறையே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன். கடந்த 2010ல் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தேன். 15 ஆண்டுகளில் பல திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறேன். ஐஏஎஸ் ஆக திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் நீங்கள் அனைத்து துறைகள் குறித்தும் அறிந்தவராக இருக்க வேண்டும்.
உங்களுக்கு வழி காட்டுவதற்கு யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம். நான் இருக்கிறேன் என்பதை ஒருநாளும் மறக்க வேண்டாம். ஒவ்வொரு தோல்வியின் போதும் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். விடாமுயற்சியோடு வெற்றியை நோக்கி செயல்பட வேண்டும்" என்று பேசினார்.
ராம் பிரசாத் மனோகரின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் www.rpmias.com என்கிற தளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications