ராங் ரூட் ரெய்டு.. நள்ளிரவில் காரை துரத்தி 'பஞ்சாயத்து' வைத்த இளைஞர்கள்! காட்டி கொடுத்த டேஷ் கேமிரா
நள்ளிரவு பயணத்தின் போது அடையாளம் தெரியாத நபர்களுக்காக கார் கதவுகளையும் ஜன்னல்களையும் திறக்க வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தல்.
பெங்களூரு: பெங்களூரில் நள்ளிரவில் கார் மீது பைக்கை மோதிவிட்டு காரில் உள்ளவர்களிடம் சண்டை போடுவதற்காக 5 கி.மீ தூரம் காரை துரத்தி சென்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த தம்பதியினர் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வெளியூர் சென்று விட்டு காரில் வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் வீடு திரும்ப அதிகாலை 3 மணி ஆகியுள்ளது. அப்போது கிழக்கு பெங்களூரு பகுதியில் வந்துக்கொண்டிருந்தபோது இடதுபுறமாக திரும்ப கார் முயன்றிருக்கிறது. ஆனால் எதிரே வேகமாக பைக்கில் வந்த இருவர் இந்த காரில் மோதி கீழே விழுந்துள்ளனர். பெரிய அடி எதுவும் படவில்லை என்றாலும் கூட பைக்கை ஓட்டி வந்த இளைஞர் காரில் இருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
காரிலிருந்து அவர்களை கீழே இறங்க சொல்லியுள்ளார். ஆனால் தம்பதியினர் காரிலிருந்து கீழே இறங்கவில்லை. தங்கள் காரில் கேமிரா இருப்பதாகவும் நடந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே எங்கள் மீது தவறு இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்காத இளைஞர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மொபைலை எடுத்து அவருடைய நண்பர்களுக்கு போன் செய்துள்ளனர். மட்டுமல்லாது பைக் மீது மோதியதற்காக பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர்.

வீடியோ
அவர்கள் காரிலிருந்து கீழ் இறங்காமல் ரிவர்ஸில் சென்றிருக்கிறார்கள். ஆனால் இந்த இளைஞர்கள் இவர்களை விடாமல் துரத்தியுள்ளனர். ரிவர்ஸில் சென்ற கார் வேறு ஒரு பாதையை பிடித்து சென்றிருக்கிறது. ஆனால் அப்போதும் அவர்களை இளைஞர்கள் விடவில்லை. இப்படியாக காரை சுமார் 5 கி.மீ வரை இளைஞர்கள் துரத்தி சென்றுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலடைந்த தம்பதியினர் இது தொடர்பாக தங்களது காரில் பதிவாகியிருந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். இதனையடுத்து கிழக்கு பெங்களூருவின் குடிமக்கள் இயக்கம் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்தது.

மிரட்டல்
இதனையடுத்து பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பெல்லந்தூரில் மீன் விற்பனை செய்து வந்த தனுஷ்(24) மற்றும் ரக்ஷித்(20) என்பது தெரிய வந்தது. இவர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது IPC பிரிவு 384, 504 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "காரின் டேஷ் கேமிராவில் இந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவாகியுள்ளது. இளைஞர்கள் காரின் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டி துரத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

ராங் ரூட்
இந்த இளைஞர்கள் வந்ததே ராங் ரூட் அப்படி இருக்கையில் காரில் வந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியிருப்பது சட்டப்படி தவறு. எனவே நாங்கள் இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு காவல் பிரிவினருக்கு தெரிவித்தோம். அவர்கள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளார்கள்" என்று கூறியுள்ளார். மேலும், நள்ளிரவு மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் காரின் கதவுகளும், கண்ணாடிகளையும் திறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். காரில் பயணித்தவர்களை சுமார் 5 கி.மீ தூரம் துரத்தி சென்று மிரட்டியுள்ள சம்பவம் பெங்களூரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிவுறுத்தல்
நள்ளிரவு நேரங்களில் பெங்களூரில் இது போன்று அடிக்கடி நிறைய சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும், எனவே இந்த சம்பவங்களை தடுக்க காவல்துறையினரின் ரோந்து பணிகளையும், செக்போஸ்ட்களையும் அதிகரிக்க வேண்டும் என்று பெங்களூர்வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாக டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்துக்கொண்டிருந்தபோது டெல்லி மகளிர் ஆணைய தலைவி பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications