என்னது வண்டியில பெட்ரோல் கம்மியா இருக்கா.. அப்போ வெளிய போகவே வேணாம்ப்பா.. பெங்களூர்வாசிகளின் அவஸ்தை
பெங்களூர்: பெங்களூர் நகரில் இப்போதெல்லாம், டூவீலர் மற்றும் கார்களில் வீட்டை விட்டு வெளியே கிளம்பும் முன்பாக, போதிய அளவுக்கு எரிபொருள் இருக்கிறதா என்பதை சோதித்து பார்த்த பிறகே மக்கள் புறப்படுகிறார்கள்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுக்க தீவிரமடைந்துள்ளன. கர்நாடகாவில், தலைநகர் பெங்களூரில், டவுன்ஹால், மைசூர் வங்கி சர்க்கிள் போன்ற பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையின அமைப்புகள், இடதுசாரிகள், எதிர்க்கட்சியினர், மக்கள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மங்களூரில் கடந்த 19ம் தேதி பெரும் கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
மங்களூர் சம்பவம்
சாலைகளில் டயர்களுக்கு தீ வைப்பது, பொதுச் சொத்துக்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பது போன்ற சம்பவங்கள் அங்கு நடந்தன. இந்த நிலையில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு காவல் துறையினர், பெட்ரோல் அல்லது டீசலை, பாட்டில் அல்லது கேன்களில் விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து பெட்ரோல் பங்குகளும் உத்தரவிட்டுள்ளனர்.
பெங்களூர் போலீஸ்
நகரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும், பெங்களூர் காவல்துறையின் உத்தரவு ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதியிட்ட அந்த உத்தரவில், இந்த பெட்ரோல் பங்கில், கேன் அல்லது பாட்டிலில் பெட்ரோல் அல்லது டீசல் விற்பனை செய்ய கூடாது. மீறி விற்பனை செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஒரு வாரத்திற்கு இந்த உத்தரவு அமலில் இருக்கிறது, என்று கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
இந்த உத்தரவை ஏற்று சில பெட்ரோல் பங்குகள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றன. பாட்டில்களுடன் பெட்ரோல் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு போலீஸ் உத்தரவை காரணம் காட்டி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். சில பெட்ரோல் பங்குகளில் காவல்துறையின் உத்தரவை மதிக்காமல், பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி கொடுக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது.
பெண் டாக்டர் கொலை
முன்னதாக ஹைதராபாத் நகரில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர், நான்கு பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டச் சம்பவத்திற்குப் பிறகும் பெங்களூரில் பாட்டில்களில் பெட்ரோல் அல்லது டீசல் விற்பனை செய்யக்கூடாது என்று காவல் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அது பின்னர் தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது குடியுரிமை சட்டத் திருத்த போராட்டங்களை தொடர்ந்து மீண்டும் அதுபோன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்புகிறார்கள்
ஒரு வகையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் அல்லது உயிர் மற்றும் உடமைகளுக்கு தீங்கு விளைவிப்பது போன்ற சமூக விரோதிகளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள இந்த உத்தரவு பலனளிக்கும் என்ற போதிலும் கூட, பெட்ரோல் அல்லது டீசல் தீர்ந்துபோய் வாகனங்கள் எங்காவது நடுவழியில் நின்று விட்டால் அப்போது எரிபொருளை வாங்கி செல்லப் பயன்படுவது பாட்டில் மற்றும் கேன்கள்தான். இப்போது பெங்களூரில் காவல் துறை உத்தரவு காரணமாக, இது போல எரிபொருள் இல்லாமல் நடுவழியில் சிக்கிக்கொள்ளும் வாகன ஓட்டிகள் அவஸ்தைப்படுகிறார்கள். எனவே போதிய அளவுக்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டுதான், மக்கள் வெளியே கிளம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.