சமூக வலைதள பதிவால் வெடித்த வன்முறை... கர்நாடகத்தில் போலீஸ் நிலையம் மீது கல்வீச்சு... 144 தடை உத்தரவு
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் சமூக வலைதள பதிவு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் போலீஸ் நிலையத்தின் மீது கல்வீசப்பட்டது. இந்த வன்முறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 12 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றம் நிலவுவதால் ஏப்ரல் 20 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பழைய உப்பள்ளி போலீசில் அவர்கள் புகார் செய்தனர்.
இந்த புகார் மீது விசாரணை நடத்திய போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இருப்பினும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பழைய உப்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
வன்முறை
இவ்வாறு திரண்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்லவில்லை. அப்போது திடீரென்று சிலர் போலீஸ் நிலையம் மீது கல்வீசினர். வாகனத்தை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் வன்முறை வெடித்தது. இதையடுத்து வன்முறையாளர்களை விரட்ட போலீசார் தடியடி நடத்தினர். இருப்பினும் அவர்களை விரட்ட முடியவில்லை. இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டனர்.
40 பேர் கைது
இந்த சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீசார் என மொத்தம் 12 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
144 தடை உத்தரவு
இதுகுறித்து தார்வார்-உப்பள்ளி போலீஸ் கமிஷனர் லாபுராம் கூறுகையில், ‛‛வன்முறை சம்பவம் தொடர்பாக மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார். மேலும் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் உப்பள்ளி நகரில் ஏப்ரல் 20 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் எச்சரிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛மாநிலத்தில் சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் அனுமதி கிடையாது. இதை போலீசார் சகித்து கொள்ளமாட்டார்கள். சட்டத்தை கையில் எடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். இதுபோன்ற சம்பவங்களுக்கு பின்னணியில் உள்ள அமைப்புகளுக்கு நான் ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். சட்டத்தை மீற வேண்டாம். மாநில அரசு அதை ஒருபோது சகித்து கொள்ளாது'' என்றார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், ‛‛வன்முறையில் ஒரு போலீஸ் அதிகாரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.