வெலவெலத்துப்போன நியூ தமிழ் காலனி.. மகள் சடலத்துடன் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே அழுது புரண்ட தாய்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மண்டியாவில் இறந்துபோன மகளின் பிணத்தோடு, உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் 4 நாட்களாக தங்கியிருந்து அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா நகரில் ஹாலஹள்ளி பகுதி உள்ளது. இங்கு நியூ தமிழ் காலனியில் வசித்து வந்தவர் நாகம்மா (வயது 55). இவரது மகள் ரூபா (32). இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார்.
ரூபாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனிவாஸ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூபா தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்தார்.
‛கும்மி’ எடுத்த கோவை மக்கள்... உதவிக்கு சென்ற உபி இளைஞரின் உடல் புண்ணானது.. என்னாச்சி?
தாயுடன் வசித்த மகள்
இதையடுத்து அவர் மண்டியா நியூ தமிழ் காலனியில் தாய் நாகம்மாவுடன் வசித்து வந்தார். இந்த வேளையில் தாய்-மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இருப்பினும் அடுத்த சில மணிநேரங்களில் இருவரும் பிரச்சனையை மறந்து பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
வீட்டில் துர்நாற்றம்
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக வீட்டை விட்டு ரூபா வெளியே வரவில்லை. இதுபற்றி தெரிந்தாலும் அக்கம்பக்கத்தினர் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. மாறாக வெளியூர் சென்றதாக அவர்கள் நினைத்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இன்று வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அழுகிய நிலையில் பிணம்
அப்போது ரூபாவின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதன் அருகே நாகம்மா அழுதபடி இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மண்டியா கிழக்கு போலீசார் விரைந்து வந்து ரூபாவின் உடலை பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிணத்துடன் 4 நாள்
ரூபாவின் தாய் நாகம்மா எதுவும் பேசவில்லை. இதனால் ரூபா எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. உடல்நலக்குறைவால் அவர் இறந்து இருக்கலாம் எனவும், 4 நாட்களாக நாகம்மா மகளின் பிணத்தோடு வசித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் பிரதே பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவரது சாவுக்கான உண்மை காரணம் தெரியவரும் என்றனர். இதுபற்றி மண்டியா கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.