500 ரூபாய் அப்பே.. சிப்ஸ் பாக்கெட்டுகளுக்குள் பணத்தாள்? போட்டி போட்டு கடையை காலி செய்த கிராம மக்கள்
பெங்களூரு: நொறுக்குத்தீனி உணவான சிப்ஸ் பாக்கெட்டுகளுக்குள் 500 ரூபாய் பணத்தாள் இருந்ததாக தகவல் பரவியிருக்கிறது. இதனால், கடைகளை நோக்கி படையெடுத்த கிராம மக்கள் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி காலி செய்து விட்டனராம்.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் கடைகளில் விற்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் தாள் இருந்தது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்தத் தகவல் அந்தப் பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியதால், மொத்த சிப்சையும் வாங்கி குவித்து இருக்கின்றனர் அந்த ஊர் பொதுமக்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-
பெரிய நகரம் முதல் சிறிய கிராமம் வரை பெட்டிக்கடைகளில் வெளியில் வண்ண வண்ண நிறங்களில் சிப்ஸ் பாக்கெட்டுகள் தொங்குவதை அனைவரும் பார்த்து இருப்போம். சிறுவர்கள் மட்டும் இன்றி பெரியவர்களுக்கு கூட வாங்கி ருசி பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில், சிப்ஸ் பாக்கெட்டுகள் பல வண்ணங்களிலும் பிளேவர்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
நட்ஸ்..சிப்ஸ்..நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிடுவாங்க ஓவியா
சிப்ஸ் வாங்குவதற்காக கூட்டம்
குழந்தைகள் கடை வீதிகளுக்கு சென்றால் இந்த சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி ருசிபார்த்து விட்டுதான் வீடு திரும்புவார்கள் என்று சொல்லும் அளவுக்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை உள்ளது. இந்தக் கதையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். சிறுவர்கள், குழந்தைகள் அடம்பிடிப்பது சரி.. ஆனால் கர்நாடக மாநிலத்தில் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்க பெரியவர்கள் முண்டியடித்த நிகழ்வுதான் இன்று இணையத்தில் அதிகம் பரவரும் செய்திகளில் ஒன்றாக உள்ளது.
500 ரூபாய் தாள்கள்
ஏனென்றால், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்கசுகூர் தாலுகா உன்னூர் கிராமத்தில் விற்பனை செய்யப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டுகளுக்குள் 500 ரூபாய் இருந்துள்ளது. ஒன்று இரண்டால்ல.. 5 நிறுவனங்களின் சிப்ஸ் பாக்கெட்டுகளில் இப்படி 500 ரூபாய் தாள்கள் இருந்ததாம். சிப்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுவர்கள் உள்ளே 500 ரூபாய் தாள் இருப்பதை சொல்லியிருக்கிறார்கள். இந்த தகவல் அடுத்த சில மணி நேரங்களில் காட்டுத்தீ போல பரவியது.
பெட்டிக்கடை முதல் பெரிய கடைகள் வரை
உடனே, சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்குவதற்காக பெரியவர்களே திரண்டு வந்துவிட்டனர். போட்டி போட்டுக்கொண்டு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி குவித்து இருக்கின்றனர். சிலர் மொத்தமாக சிப்ஸ் பாக்கெட்டுகளையும் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள கடைகளில் கடும் கூட்டம் காணப்பட்டது. பெட்டிக்கடை முதல் பெரிய கடைகள் வரை சிப்ஸ் வாங்குவதற்கே பலரும் கூடி நின்றதாகவும் சொல்லப்படுகிறது.
ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை
இதனால், கடந்த 4 நாட்களில் மட்டும் சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்பனையால் மட்டுமே ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடையில் இருந்த அனைத்து ஸ்டாக்குகளும் தீர்ந்து விட்டதால், சிலர் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கின்றனர். மீண்டும் கடைகளுக்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வந்ததும் அதேபோல, பொதுமக்கள் போட்டிக்கொண்டு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி குவிக்க இருக்கின்றனர்.
விளம்பரபடுத்துவதற்காக..
ஆனால், இரண்டாவது முறையாக வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டுகளில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதனால், பலரும் ஏமாற்றத்துடன் வெறும் சிப்சுடன் வீட்டுக்கு திரும்பியிருக்கின்றனர். சிப்ஸ் பாக்கெட்டுக்குள் 500 ரூபாய் தாள் இருந்தது பற்றிய பேச்சுக்கள் தான் ராய்சூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கிறதாம். சிப்ஸ்களை விளம்பரபடுத்துவதற்காக சிப்ஸ் நிறுவனங்கள் இதுபோன்று 500 ரூபாய் தாளை உள்ளே அடைத்து விற்பனை செய்தததா? எல்லது வேறு ஏதேனும் காரணமோ என தீவிரமாக அப்பகுதி மக்கள் ஆலோசித்து வருகின்றனர்.
ரூபாய் தாள்கள் உண்மையானவையா?
இது ஒருபுறம் இருக்க சிப்ஸ் பாக்கெட்டுகளுக்குள் இருந்த ரூபாய் தாள்கள் உண்மையானவையா அல்லது போலி தாள்களா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. எது எப்படியோ.. சிப்ஸ் பாக்கெட்டுகள் ஏகத்திற்கும் தற்போது அந்த கிராமத்தினர் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டது என்று பலரும் பேசிக்கொள்வதை பார்க்க முடிகிறது.