"அப்படி ஒரு வேலையே வேண்டாம்.." ஹிஜாப் தடையால் கல்லூரி விரிவுரையாளர் பணியை ராஜினாமா செய்த பெண்
தும்கூர்: கர்நாடக மாநிலம், தும்கூரில் ஹிஜாப் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி விரிவுரையாளர் தனது பணியை ராஜினாமா செய்தார்.
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. உடுப்பியில் துவங்கிய இந்த போராட்டம் மாநிலத்தின் பல பகுதிகளில் எதிரொலித்தது. ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் எதிர்தரப்பினர் காவிஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.

கர்நாடக அரசும் பள்ளி, கல்லூரிகளில் சீருடை முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தினமும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த வார விசாரணையின்போது, ‛‛வழக்கு விசாரணை முடியும்வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது'' என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து ஹிஜாப் பிரச்சனையால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பிப்., 14ல் 10 வகுப்பு வரை பள்ளிகளும், பியூ, டிகிரி கல்லூரிகள் பிப்.,16 முதலும் செயல்பட துவங்கின. தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர்.
இவர்களை பள்ளி நிர்வாகத்தினர் தடுத்து ஹிஜாப்பை அகற்ற வலியுறுத்துகின்றனர். இதற்கு சில மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து தேர்வு கூட எழுதாமல் திரும்பி செல்கின்றனர். இதுதொடர்பாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் தான் ஹிஜாப் அகற்ற கூறும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் உள்ள கல்லூரியின் விரிவுரையாளர் ராஜினாமா செய்துள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு: துமகூரு நகரில் ஜெயின் பியூ கல்லூரியில் ஆங்கில துறையில் விரிவுரையாளராக பணியாற்றியவர் சாந்தினி. இவர் தனது பணியை ராஜினாமா செய்வதாக கூறி கல்லூரி முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‛‛நான் கடந்த 3 ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து வருகிறேன். தற்போது இதை அகற்றும்படி கூறுவதால் எனது விரிவுரையாளர் பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன். மதம்சார்ந்த உரிமைகளை பின்பற்ற அரசியலமைப்பு சட்டம் அனுமதிப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஜனநாயகமற்ற உங்களின் செயலை கண்டிக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications