காங்கிரசுக்கு ‛சிங்கிள் டிஜிட்’ தான்.. கர்நாடகாவை வெல்லும் பாஜக + ஜேடிஎஸ் கூட்டணி - India tv சர்வே
பெங்களூர்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள India Tv cnx-ன் கருத்துக்கணிப்பில் கர்நாடக மாநிலத்தில் பாஜக அதிக தொகுதியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது, உடுப்பி, சிக்கமங்களூர், ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூர், சாமராஜ்நகர், பெங்களூர் புறநகர், பெங்களூர் வடக்கு, பெங்களூர் சென்ட்ரல், பெங்களூரு தெற்கு, சிக்பல்லாபூர், கோலார் என 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 26ம் தேதியும்,

மீதமுள்ள சிக்கோடி, பெல்காம், பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, ராய்ச்சூர், பிதார், கொப்பல், பெல்லாரி, ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவணகெரே, ஷிமோகா 14 தொகுதிகளுக்கு மே மாதம் 7ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் கர்நாடகாவில் இந்த முறை பாஜகவின் கை ஓங்கும் என இந்தியா டிவியின் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதாவது, மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 22 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, காங்கிரஸ் 4 தொகுதிகளையும், மத சார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலத்தில் அரசியல் சூழலை பொறுத்த அளவில் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது. கடந்த 2019 காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் 14+3 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால், காங்கிரஸின் கூட்டணி ஆட்சி பாதியிலேயே முடிவுக்கு வந்தது. ஆனால், அடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. அதேபோல, லோக்சபா தேர்தலிலும் காங்கிரசுக்கு ஆதரவாக காற்று வீசும் என்று அக்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
மறுபுறம் பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகமாக இருப்பதால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று பலரும் கூறுகின்றனர். குறிப்பாக ஷிமோகா தொகுதியில் பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனை எதிர்த்து போட்டியிடப்போவதாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் அவருக்கு போட்டியிட சீட் மறுக்கப்பட்ட நிலையில் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்
இது குறித்து அமித்ஷாவை சந்தித்து விவாதிக்க டெல்லி சென்ற ஈஸ்வரப்பாவை, அமித்ஷா சந்திக்கவில்லை. எனவே கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
ஷிமோகா தொகுதி மட்டுமல்லாது சித்ரதுர்கா தொகுதியில் மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு சீட் மறுக்கப்பட்டதால் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடியை அவர் உயர்த்தியிருக்கிறார். பெங்களூர் வடக்கு தொகுதியை பொறுத்த அளவில் சிட்டிங் எம்பியான சதானந்த கவுடாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், புதிய வேட்பாளர் கரந்தலஜேவுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
சிக்கமகளூர், மைசூர், தாவணகரே உள்ளிட்ட தொகுதிகளும் இதே பிரச்னை எழுந்திருக்கிறது. பாஜக வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த தலைவர்களே போர் கொடி தூக்கியுள்ளனர்.
இதற்கிடையில், India Tv-ன் கருத்துக்கணிப்பில் கர்நாடக மாநிலத்தில் பாஜக அதிக தொகுதியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications