மொத்தமா தூக்குங்க.. நேரடியாக களமிறங்கி.. கண்டிப்புடன் சொன்ன இறையன்பு ஐஏஎஸ்.. அடுத்து நடந்த சம்பவம்!
சென்னை: சென்னையில் குறிப்பிட்ட சாலை ஒன்றில் தமிழ்நாடு தலைமைச்செயலாளர் வெ இறையன்பு நேரடியாக களமிறங்கி ஆய்வு செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இருந்த அதிகாரிகளிடம் தலைமைச்செயலாளர் வெ இறையன்பு கண்டிப்புடன் சில உத்தரவுகளை பிறப்பித்ததும் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த போகி அன்று இரவு திடீரென சென்னை சாலை பணிகளை பார்வையிட்டார். முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தேனாம்பேட்டை மற்றும் வாரன்ஸ் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலைகளில் நடந்து வந்து சாலை பணிகளை சோதனை செய்தார்.
சாலைகளை அகழ்ந்தெடுக்கும் பணிகள் சரியாக நடக்கிறதா, ஏற்கனவே போடப்பட்ட சாலைகள் அகற்றப்பட்டு புதிய சாலைகள் போடப்படுகிறதா, விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.
என்ன ஆய்வு?
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க போடப்படும் சாலைகள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சாலைகளை போடும்போது ஏற்கனவே போடப்பட்ட சாலைகளை நீக்கிவிட்டு புதிதாக சாலைகள் போட வேண்டும். போட்ட சாலைகள் மீதே சாலை போட்டு மேடு ஏற்படுத்த கூடாது. இதனால் சாலையில் இருந்து மழை நீர் வீடுகளுக்குள் செல்லும் என்பதால் அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தலைமைச்செயலாளர் வெ இறையன்பு பல மாதங்களுக்கு முன்பே இது தொடர்பாக மாநிலம் முழுக்க இருக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
உத்தரவு
ஆனால் இந்த உத்தரவை சில மாவட்டங்களில் அதிகாரிகள் மதிக்கவில்லை. உத்தரவை மீறி தொடர்ந்து சாலை மீது கோட்டிங் போல இன்னொரு சாலை போடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்து இருக்கின்றன. இதனால் மழை காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதை பற்றிய புகார் முதல்வர் தரப்பிற்கு சென்ற நிலையில்தான் சென்னையில் சாலை பணிகளை பார்வையிட தலைமைச்செயலாளர் வெ இறையன்புவிற்கு முதல்வர் உத்தரவிட்டார். அதேபோல் கடந்த வாரம் தலைமைச்செயலாளர் வெ இறையன்பு சாலை பணிகளை சென்னையில் பார்வையிட்டார்.
முதல்வர் சோதனை
அதன்பின் முதல்வர் ஸ்டாலினும் போகி அன்று நேரடியாக களமிறங்கி சாலை பணிகளை பார்வையிட்டார். இது அதிகாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் தலைமைச்செயலாளர் வெ இறையன்பு குரோம்பேட்டையில் உள்ள கட்டபொம்மன் தெருவில் சாலை பணிகளை பார்வையிட்டு இருக்கிறார். அப்போது தலைமைச்செயலாளர் வெ இறையன்பு அங்கு இருந்த அதிகாரிகளிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் இறுதியில் இங்கு சாலை போடப்பட்டுள்ளது.
விதி மீறல்
ஆனால் அப்போது சரியாக விதியை கடைபிடிக்காமல், ஏற்கனவே போடப்பட்ட சாலை மீது சாலை போட்டுள்ளனர். அதோடு சாலையை மழை நாளில் அவசரமாக போட்டுள்ளனர். இது தொடர்பாக புகார் வந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் மாலை தலைமைச்செயலாளர் வெ இறையன்பு நேரடியாக களத்திற்கே சென்று பார்வையிட்டு இருக்கிறார். களத்தில் பார்வையிட்ட தலைமைச்செயலாளர் வெ இறையன்பு.. சாலை மோசமாக இருப்பதை பார்த்துவிட்டு.. என்ன இது.. ஏன் ரோடு இவ்வளவு மோசமாக இருக்கிறது.
கண்டிப்பு
பழைய சாலையை ஏன் அகற்றிவிட்டு புதிய சாலை போடவில்லை. இதை எல்லாம் மொத்தமாக தூக்குங்க. மறுபடியும் முதலில் இருந்து போடுங்கள். கான்டிராக்டரை மீண்டும் சாலை போட சொல்லுங்கள் என்று தலைமைச்செயலாளர் வெ இறையன்பு உத்தரவிட்டு இருக்கிறார். கண்டிப்புடன் பேசிய தலைமைச்செயலாளர் வெ இறையன்பு இந்த சாலை பணிகளை மேற்பார்வையிட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
மாற்றம்
தலைமைச்செயலாளர் வெ இறையன்பு நேரடியாக சோதனை செய்த நிலையில் உடனடியாக கட்டபொம்மன் தெருவில் புதிய சாலை போடப்பட்டு இருக்கிறது. அங்கு இருந்த பழைய சாலை அகற்றப்பட்டு புதிய சாலை முறையாக போடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மற்ற இடங்களிலும் முறையாக பழைய சாலைகளை அகற்றிவிட்டு புதிய சாலைகளை போடும் பணிகள் நடந்து வருகின்றன. டாப் அதிகாரிகள் நேரடியாக கண்காணிப்பதால் கீழ் மட்ட அதிகாரிகள் முறையாக பணிகளை செய்து வருவதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.