சந்திரனில் தரையிறங்கும் சந்திரயான் 3! விக்ரம் லேண்டரின் என்ஜின் பழுதானால் என்னவாகும்? இஸ்ரோ விளக்கம்
பெங்களூர்: விக்ரம் லேண்டரில் சென்சார்களும் என்ஜின்களும் பழுதாகிவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கியுள்ளார்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை தயார் செய்தது. இதை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் ஏவியது.

இந்த சந்திரயான் வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவுக்கான மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்து நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வரும் சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் படத்தை இஸ்ரோ வெளியிட்டிருந்தது.
நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலம் அதிகபட்சமாக 18 ஆயிரம் கிலோ மீட்டராகவும் குறைந்தபட்சமாக 100 கிலோமீட்டராகவும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதன் உயரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறது.
இதனால் வரும் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்குவதற்கான முயற்சிகள் செய்யப்படுகிறது. எனினும் பலருக்கு லேண்டரில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் என்னவாகும் என்ற கேள்வி இருக்கிறது. இந்த நிலையில் ஒரு தன்னார்வலத் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஒரு விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் விக்ரம் லேண்டரின் முழு வடிவமைப்பும் முடிந்த அளவுக்கு தோல்விகளை சமாளிக்கும் வகையில்தான் உருவாக்கியுள்ளோம். அனைத்து சென்சார்களும் செயலிழந்தாலும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும். என்ஜின்களே வேலை செய்யாவிட்டாலும் விக்ரம் தரையிறங்கும்.
நிலவில் விக்ரம் கிடைமட்டமாக சாப்ட் லேண்டிங் செய்வதுதான் இஸ்ரோ குழுமத்தின் முன்னாடி இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். லேண்டர் ஆர்பிட்டரில் இருந்து பிரிந்தவுடன் சந்திரனில் பாதுகாப்பாக தரையிறங்குவதற்காக விக்ரம் கிடைமட்டமாக (horizontal) இறங்கத் தொடங்கும் என சோம்நாத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications