பாஜக பாசம்? மோடி, அமித்ஷா போட்டாவை எடுக்க முடியாது..அடம் பிடிக்கும் ஜெகதீஷ் ஷெட்டர்..நெளியும் காங்.
பெங்களூர்: பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க மறுத்ததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜெகதீஷ் ஷெட்டர் தனது அலுவலகத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா படங்களை அகற்ற மறுத்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. தேர்தல் நெருங்கி விட்டதால் அங்கு பிரசாரம் அனல் பறக்கிறது. ஆளும் பாஜக காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், பாஜக, காங்கிரசில் சில அதிருப்தி குரல்களும் எழுந்தன.

குறிப்பாக கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாஜக தலைமை சீட் கொடுக்க மறுத்தது. இதனால் கோபம் அடைந்த ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும் அவருக்கு விருப்பமான தொகுதியான உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியது.
ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சொல்லி வரும் எடியூரப்பா, அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று சொல்லி வருகிறார். ஜெகதீஷ் ஷெட்டரை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில், இந்த தொகுதியின் மக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் என்னை முடிந்தால் வீழ்த்தட்டும் என்றும் ஜெகதீஷ் ஷெட்டர் சவால் விடுத்து வருகிறார். இதனால், ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடும் தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்ற தொகுதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.
பாஜகவுடன் கடுமையாக வார்த்தை மோதலில் ஜெகதீஷ் ஷெட்டர் ஈடுபட்டு வரும் நிலையிலும், உப்பள்ளியில் உள்ள தனது அலுவலகத்தில் பிரதமர் மோடி, அமித்ஷாவின் புகைப்படங்களை அகற்றாமல் வைத்து இருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷாவுடன் ஜெகதீஷ் ஷெட்டர் எடுத்துக் கொண்ட படங்கள் அவரது அலுவலகத்திற்கு சென்றவுடன் நேரடியாக கண்ணில் படும் வகையில் உள்ளது.

இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதோடு,மக்களுக்கு ஆச்சர்யத்தையும் கொடுத்துள்ளது. இது குறித்து ஜெகதீஷ் ஷெட்டரிடம் கேட்ட போது, இந்த விவகாரத்தில் ஆச்சர்யபட என்ன இருக்கிறது. ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் சேர்ந்த உடனயே தலைவர்களின் புகைப்படங்களை அகற்றுவது சரியானதாக இருக்காது. என்னால் அப்படி செய்ய முடியாது" என்றார்.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மீது தங்களுக்கு மிருந்த மரியாதை இருப்பதாக ஜெகதீஷ் ஷெட்டரும் அவரது மனைவியும் கடந்த காலங்களில் பலமுறை சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது. இதற்கிடையே, உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி, அமித்ஷா புகைப்படங்களை ஜெகதீஷ் ஷெட்டர் அகற்றாமல் வைத்திருப்பதாகவும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications