நோ டிராபிக்..ஜஸ்ட் 20 நிமிடம் தான்.. பெங்களூரில் இருந்து ஓசூருக்கு இனி ஹெலிகாப்டரில் பறக்கலாம்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தையும், தமிழ்நாட்டின் தொழில் நகரமாக உருவாகி உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரையும் இணைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் 70 கிலோமீட்டரை 3 மணிநேரத்துக்கு பதில் வெறும் 20 நிமிடத்தில் பொதுமக்கள் கடக்கலாம். இந்த ஹெலிகாப்டர் சேவையை எப்படி பெறுவது? டிக்கெட் கட்டணம் என்ன? என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் கிருஷ்கிரி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள தான் இருமாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள மிகப்பெரிய நகராகும். இங்குள்ள தொழிற்பேட்டையில் டிவிஎஸ் உள்பட ஏராளமான முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது புதிய நிறுவனங்களில் அங்கு படையெடுத்து வருகின்றன. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் ஓசூருக்கு வருகின்றன. இதனால் பெங்களூரில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் ஓசூர் வந்து செல்கின்றனர். அதேபோல் ஓசூர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகளவில் பெங்களூர் சென்று வருகின்றனர்.
அடுத்த ஷாக்.. பெங்களூர் சாலையில் திடீரென விழுந்த ராட்சத பள்ளம்..பைக்கில் சென்றவர் காயம்.. என்னாச்சு?
பெங்களூர்-ஓசூர் போக்குவரத்து நெரிசல்
இருமாநிலங்கள் இடையே நிலவும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக காலை, மாலை பீக் ஹவர்ஸ்களில் போக்குவரத்து நெரிசல் என்பது கடுமையாக இருக்கும். இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை தான் தினசரி நடந்து வருகிறது. இதனால் ஓசூர்-பெங்களூர் இடையேயான போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. சமீபத்தில் கூட பெங்களூர் பொம்மசந்திராவில் இருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பு செய்ய கர்நாடக அரசு ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்மொழிவு ஒன்றை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படலாம். இதன்மூலம் பெங்களூர்-ஓசூர் இடையே மக்கள் குறைந்த கட்டணத்தில் விரைவாக பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.
பெங்களூர் விமான நிலையத்துக்கு 3 மணிநேரம்
இந்நிலையில் தான் தற்போது பெங்களூர்-ஓசூர் இடையே ஹெலிகாப்டர் சேவை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ‛தொழில் நகர்' என பெயர் பெற்ற ஓசூர், கர்நாடகாவின் தலைநகர் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தற்போதைய சூழலில் பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து ஓசூருக்கு காரில் செல்ல வேண்டும் என்றால் சுமார் 3 மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் செலவிட வேண்டும். குறிப்பாக விமான பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் முன்கூட்டிய திட்டமிடலுடன் கூடுதலாக 2 முதல் 3 மணிநேரத்துக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பெங்களூர் விமான நிலையம் மூலம் ஓசூர் வருமு் பெரிய பெரிய தொழிலதிபர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டர் சேவை துவங்க முடிவு
இந்நிலையில் தான் BLADE India நிறுவனம் சார்பில் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் ஓசூருக்கு ஹெலிகாப்டர் சேவையை துவங்க முடிவு செய்துள்ளது. இது விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிமையாக பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து ஓசூருக்கும், ஓசூரில் இருந்து பெங்களூர் விமான நிலையத்தையும் அடைய முடியும். பெங்களூர் விமான நிலையம்-ஓசூர் இடையேயான தரைவழி போக்குவரத்து பயண நேரம் சுமார் 3 மணிநேரத்தில் இருந்து பெருமளவு குறைய உள்ளது.
வெறும் 20 நிமிடத்தில் பயணம்
அதன்படி பெங்களூர் விமான நிலையம்-ஓசூர் இடையேயான பயணத்தை ஹெலிகாப்டரில் பொதுமக்கள் வெறும் 20 நிமிடத்தில் மேற்கொள்ள முடியும். இந்த ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் 3 பேர் வரை பயணம் செய்ய முடியும். விமான நிலையத்தில் இருந்து காலையிலும், மாலையிலும் இந்த ஹெலிகாப்டர் சேவை இருக்கும். காலையில் 8.45 மணியில் இருந்து 10.30 மணி வரையும், மாயைில் 3.45 மணியில் இருந்து 5 மணி வரையும் இந்த ஹெலிகாப்டர் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
இந்த ஹெலிகாப்டர் சேவையை பெற விரும்புவோர் BLADE India இணையதளம் மற்றும் அந்த நிறுவனத்தின் மக்கள் தொடர்பு குழுவை தொடர்பு கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும். பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து ஓசூருக்கு பயணிக்க டிக்கெட் கட்டணமாக ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் இந்த ஹெலிகாப்டர் சேவை நடைமுறைக்கு வந்த பிறகு மீண்டும் அந்த நிறுவனம் சார்பில் சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளது. அதன்படி பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் ஒயிட்பீல்டு பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐடி ஊழியர்கள் அதிகமாக பயனடைய வாய்ப்புள்ளது.
முந்தைய ஹெலிகாப்டர் சேவைகள்
பிளேடு இந்தியா நிறுவனம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஹெலிகாப்டர் சேவைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 நவம்பரில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனேயில் இருந்து ஷீரடிக்கு ஹெலிகாப்டர் சேவை முதல் முதலாக தொடங்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சேவைகள் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பெங்களூரில் இருந்து கர்நாடகாவில் சுற்றுலா தலமாக உள்ள குடகு, பல்லாரி மாவட்டம் ஹம்பி, மண்டியா மாவட்டம் கபினிக்கும், ஆந்திராவின் திருப்பதி மற்றும் கோவாவுக்கும் ஹெலிகாப்டர் சேவை உள்ளது. இந்த நிறுவனம் வரும் 2026ம் ஆண்டுக்குள் இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பல நகரங்களில் 200 தளங்கள் அமைத்து ஹெலிகாப்டர் சேவையை விரிவுப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.