மசூதிக்கு முன் பாட்டு போட்டு ஆட்டம்.. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பரபரப்பு! கர்நாடக போலீஸ் ஆக்சன்
பெங்களூர்: சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் சிறப்பான கொண்டாட்டங்களுடன் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், விநாயகர் சிலை கரைப்பு தினத்தில் சில சர்ச்சைகள் மேலெழுந்தன.
குறிப்பாக கர்நாடகா மாநிலத்தின் கல்புர்கி பகுதியில் உள்ள மெஹபஸ் மசூதிக்கு வெளியே சிலை கரைப்பு நாளன்று மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் பாடல் ஒலிபரப்பப்பட்டதற்காக அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
முன்னதாக பெங்களூரின் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்திருந்த நிலையில், தற்போது மசூதிக்கு வெளியே மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் பாடல் ஒலிபரப்பப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
சிலை கரைப்பு
கடந்த 31ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. வித்தியாசமான சிலைகளில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து கடந்த 10ம் தேதி விநாயகர் சிலை கரைப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சில சர்ச்சைகள் ஆங்காங்கே உருவாகியுள்ளன. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தின் கல்புர்கி பகுதியில் உள்ள மெஹபஸ் மசூதிக்கு வெளியே சிலை கரைப்பு நாளன்று மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் பாடல் ஒலிபரப்பப்பட்டது.
மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் பாடல்
இந்த பகுதியில் வைத்து வழிப்படப்பட்ட விநாயகர் சிலைகள் கடந்த 10ம் தேதி மாலை அருகில் இருந்த நீர் நிலைகளில் கரைப்பதற்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது மெஹபஸ் மசூதியை கடந்து சென்றபோது, 'இந்த நிலத்தை இரத்தத்தில் நனைப்போம், உன் இடத்தில் உன்னை வைப்போம்' எனும் பொருள்படும் வகையில் உள்ள பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூகை வலைத்தளங்களில் வேகமாக பரவின. இது ஆத்திரமூட்டும் செயல் என்றும் பல்வேறு தரப்பினர் விமர்சித்திருந்தனர்.
வழக்குப்பதிவு
மேலும், விநாயகர் சிலை கரைப்பில் பங்கேற்றவர்கள் இந்த பாடலுக்கு மசூதிக்கு வெளியே நடனமாடியுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறை தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறி, டிஜே உரிமையாளர் சலீம் உள்ளிட்ட மேலும் சிலர் மீது கல்புர்கி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கைது இல்லை
இவர்கள் மீது, போக்குவரத்து விதிமீறல் சட்டம், அரசு அதிகாரிகளின் சட்டப்பூர்வ உத்தரவுக்கு கீழ்ப்படியாதது, மத உணர்வுகளை சீர்குலைக்கும் செயல்களை மேற்கொள்வது போன்ற சட்ட விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெங்களூரில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட முயன்ற நிலையில் உச்சநீதிமன்றம் இதற்கு அனுமதி மறுத்து இந்த மைதானத்தில் கொண்டாட்டங்கள் கூடாது என்றும் கூறியிருந்தது.
தற்போது இந்த சம்பவத்தையடுத்து மசூதி முன்னர் மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.